பித்ரு பட்ச சிரார்த்தத்தின் போது காகங்களுக்கு உணவிடுதலின் மகத்துவம்

சுருக்கம் : நம் மறைந்த மூதாதையர்களுக்கு (பித்ருக்கள்) மறுமையில் உதவ நாம் ஏதாவது செய்ய முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? இக்கட்டுரை சிரார்த்தத்தின் போது பித்ருக்களுக்கு படைத்த உணவை காகங்கள் தின்றால் அவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்குகிறது.

பித்ரு பட்ச சிரார்த்தத்தின் போது காகங்களுக்கு உணவிடுதலின் மகத்துவம்

அட்டவணை

1. நம் பித்ருக்களுக்கு குறிப்பாக பித்ரு பட்சத்தில்  (மஹாளய பட்சம்) ஆன்மீக ரீதியில் உதவி செய்வதன் மகத்துவம்

நமது பித்ருக்களுக்கு மறுமையில் உதவ முடியும் என்பது பெரும்பாலோருக்கு தெரியாது.

குறிப்பாக, மறைந்த மூதாதையர்களுக்கான இரண்டு வார காலத்தில் (பித்ரு பட்சம் அல்லது மஹாளய பட்சம்) இந்த உதவி அதிக பயனளிக்கும். பொதுவாக வடக்கு அரைக்கோளத்தில் ஆவணி-புரட்டாசி மாதங்களில் நிகழும் இக்காலத்தில் பித்ருக்கள் பூமியின் வெகு அருகில் வருவார்கள். பித்ருக்களுக்கு உதவும் பொறுப்பு பூமியில் அவர்களது சந்ததியினருக்குதான் உண்டு.

இறப்பிற்கு பின்னே மற்றும் மறுபிறவி எடுபதற்கு முன்னே உள்ள இடைப்பட்ட காலத்தில், ஒரு பித்ருவின் சூட்சும சரீரம் கருவில் இருக்கும் சிசுவைப்போல் ஆகும்.  தாயின் கருவில் இருக்கும் சிசு நன்கு வளர கவனித்துக்கொள்வது போல், சிரார்த்தம் போன்ற ஆன்மீக சடங்குகளின் மூலம் பித்ருக்களை கவனித்துக்கொள்வது அவசியமாகும்.

‘மறுமையில் எனது பித்ருக்களுக்கு உதவி ஏன் தேவை?’ என்று உங்களில் சிலர் நினைக்கலாம்.

உண்மையில் பெரும்பாலான நமது பித்ருக்களுக்கு மறுமையில் உதவி தேவை.

நடக்கும் கலியுகத்தில், பெரும்பாலான பித்ருக்களுக்கு இறக்கும் நேரத்தில் அதிகளவு ஆசைகள் உள்ளது மற்றும் அவர்களின் ஆன்மீக சக்தியும் குறைவே. வாழும்போது தொடர்ந்து சரியான ஆன்மீக பயிற்சி செய்யாமல் இருந்ததே இதற்கு காரணம். மறுமையில் செல்வம், புகழ், படிப்பு போன்றவைக்கு ஒரு மதிப்பும் இல்லை. மறுமையில் மகத்துவம் நிறைந்த ஒரே விஷயம், ஆன்மீக நிலையோடு நேரடி தொடர்பு கொண்ட ஒருவரின் ஆன்மீக சக்தி மற்றும் பூமியில் அவர் செய்துள்ள கர்மாக்களே ஆகும். நமது பித்ருக்களில் பெரும்பாலோர் குறைந்த ஆன்மீக நிலையில் உள்ளவர்கள். அதனால், அவர்களது சூட்சும சரீரங்களுக்கு இறுதி இடத்திற்கு செல்ல தேவையான ஆன்மீக சக்தி இல்லை. பொதுவாக இறுதி இடம் என்பது பூமியை விட்டு ம்ருத்யு லோகம் (இறந்தவர் உலகம்) வழியாக  சென்றடையும் புவர்லோகம் ஆகும்.

இந்த பயணத்தில் அவர்கள் தங்கள் உலக ஆசைகள் காரணமாக மிகுந்த கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் மற்றும் தீய சக்திகளின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் மறுமையில் பயணத்தை தொடர்வதற்கு தேவையான கதியை வழங்க அவர்களுக்கு சந்ததியினரிடமிருந்து ஆன்மீக உதவி தேவைப்படுகிறது.

முக்கிய குறிப்பு : நமது பித்ருக்களுக்கு உதவினால் நமக்கும் உதவி கிடைக்கும், ஏனென்றால் மறுமையில் பயணத்தை தொடர சடங்குகள் செய்து அவர்களுக்கு ஆன்மீக சக்தி அளித்தால், அவர்கள் நம் வாழ்வில் நம்மை தொந்தரவு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. உதவியை நாடும் கண்ணோட்டம் மற்றும் சந்ததியினரின் மூலமாக ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் கண்ணோட்டம் ஆகிய இரண்டிற்கும் இது பொருந்தும்.

2. பித்ருக்களுக்கு உதவ நீங்கள் செய்யக்கூடியவை

மறுமையில் உங்கள் பித்ருக்களுக்கு உதவ 2 காரியங்களை நீங்கள் செய்யலாம்

  • ஸ்ரீ குருதேவ தத்த என்ற நாமஜபம் செய்தல் : இது இரண்டு வகையில் உதவும் ஆன்மீக பாதுகாப்பு நாமஜபம் ஆகும். பித்ரு தோஷத்தால் ஏற்படக்கூடிய கஷ்டங்களிலிருந்து நமக்கு (சந்ததியினருக்கு) ஆன்மீக பாதுகாப்பு அளிக்கிறது மற்றும் நம் பித்ருக்களுக்கு மறுமையில் கதி கிடைப்பதற்கு தேவையான ஆன்மீக சக்தியையும் அளிக்கிறது.
  • சிரார்த்தம் செய்தல் : ஒருவர் சிரார்த்தம் செய்யுமாறும் பரிந்துரைக்கப்படுகிறது. இவை பித்ருக்களின் உலக ஆசைகளை குறைத்து மறுமையில் அவர்களது பயணத்திற்கு ஆன்மீக சக்தி அளிப்பதற்கான குறிப்பிட்ட சடங்குகள் ஆகும். மேலும் விவரங்களுக்கு சிரார்த்தத்தைப் பற்றிய நம் கட்டுரையை பார்க்கவும்.

பித்ரு பட்ச (மஹாளய பட்ச) காலத்தில் ‘ஸ்ரீ குருதேவ தத்த’ நாமஜபம் செய்வதால் 50% ஆன்மீக நன்மை உண்டு. மீதமுள்ள 50% ஆன்மீக நன்மை சிரார்த்தம் செய்வதனால் கிட்டும்.

3. சிரார்த்தத்தின் போது நைவேத்தியத்தை காக்கை சாப்பிட்டால் நம் பித்ருக்கள் உதவப்பட்டார்கள் என்று அர்த்தம்

மறுமையில் பித்ருக்களுக்கு இச்சடங்குகள் உதவுகின்றதா இல்லையா என்று ஒருவர் எண்ணலாம். இதை அறிய உண்மையான வழி என்னவென்றால் சூட்சுமத்தில் என்ன நடக்கிறது என்று ஆறாவது அறிவின் மூலம் பார்ப்பதே. இருப்பினும், பித்ருக்கள் உதவப்பட்டார்கள் என்பதற்கு ஸ்தூல அறிகுறிகள் சில உண்டு.

சிரார்த்தத்தில் 3 காரியங்கள் செய்யப்படுகிறது –

  1. சைவ உணவு அளிக்கும் சடங்கு (நைவேத்தியம்)
  2. அன்ன உருண்டைகள் அளிக்கும் சடங்கு (பிண்டதானம்)
  3. நீர் அளிக்கும் சடங்கு (தர்ப்பணம்)

சிரார்த்த சடங்கு முடிந்தவுடன் காகங்கள் உண்ண நைவேத்தியம் வெளியில் வைக்கப்படும். உணவை காகங்கள் தின்றால் பித்ருக்கள் உதவப்பட்டார்கள் என்று பொருள்.

இது விசித்திரமானது என்று நீங்கள் நினைத்தால் – ஆமாம், உண்மைதான், ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் ஆன்மீக அறிவியல் பற்றியும் இப்படிப்பட்ட நிகழ்வு ஏன் நடக்கிறது என்பதையும் விளக்குவோம். பலநூறு ஆண்டுகளாக இத்தகைய பாரம்பரியம் பாரதக் கண்டத்தில் கடைபிடிக்கப்படுகிறது, சூட்சும பார்வை திறனுடையவர்கள் உண்மையாக பித்ருக்கள் ஆன்மீக நன்மைகள் பெறுவதை காணலாம்.

3.1 சிரார்த்தத்தில் சைவ உணவு நைவேத்தியம் அளிப்பதன் மகத்துவம் என்ன?

பித்ரு பட்ச சிரார்த்தத்தின் போது காகங்களுக்கு உணவிடுதலின் மகத்துவம்

சிரார்த்தச் சடங்கில் ஒருவரின் பித்ருக்களுக்கு நைவேத்தியம், பிண்டதானம் மற்றும் தர்ப்பணம் அளிப்பது மிகவும் முக்கியமானதாகும். அவர்களது ஆசைகளை குறைப்பதும் அவர்களுக்கு ஆன்மீக சக்தியை அளிப்பதும் இச்சடங்குகளின் நோக்கமாகும். குறிப்பிட்ட மந்திரங்களால் ஆன்மீக ரீதியில்  உருவேற்றப்பட்ட உணவு மற்றும் நீரை வழங்குவதன் மூலம் இது செய்யப்படுகிறது. இச்சடங்குகளின் பலனளிக்கும் திறனின் மீது, புரோஹிதர், கர்த்தா (சிரார்த்த சடங்கை செய்பவர்), சடங்கு செய்யப்படும் இடம், சம்பந்தப்பட்ட பித்ருக்களின் கர்மா மற்றும் அவர்களின் ஆன்மீக நிலை ஆகிவற்றுடன் தொடர்புடைய ஏராளமான காரணிகளின் தாக்கம் உள்ளது. இக்காரணிகள் கீழ்வருமாறு:

  • சடங்கில் பங்கேற்கும் அனைவரது ஆன்மீக நிலையும் ஆன்மீக உணர்வும் : ஒருவரது வாழ்வில் ‘நான்’ என்னும் விழிப்புணர்விற்கு பதிலாக அதே தீவிரத்தோடு இறைவனின் அல்லது குருவின் இருப்பை உணரும்போது, அதை ஆன்மீக உணர்வு என்கிறோம். இதற்கு பொருள் கடவுள் இருப்பதை நிரந்தரமாக உணர்வதே ஆகும். புரோஹிதர் மற்றும் கர்த்தாவின் ஆன்மீக நிலை எவ்வளவு அதிமாக இருக்குமோ அவ்வளவு ஆன்மீக நன்மை கிட்டும். ஆன்மீக உணர்வோடு செய்யும்போது எந்த ஒரு சடங்கும் மேலும் பயன்தரும். சடங்கில் சந்ததி உறுப்பினர் செய்யும் சங்கல்பத்தையும் இந்த ஆன்மீக நிலையம் உணர்வும் மாற்றும். சடங்குகளின் மூலம் உருவான ஆன்மீக சக்தி பித்ருக்களுக்கு அளிக்கவே இந்த சங்கல்பம் செய்யப்படுகிறது.
  • புனிதநூல்களின் படி முறையான சடங்குகள் செய்தல் : பொருள்சார்ந்த அறிவியலில் துல்லியமான முறைகளும் கோட்பாடுகளும் இருப்பது போல், இந்த சடங்குகளை செய்வதிலும் துல்லியமான ஆன்மீக அறிவியல் உண்டு.
  • இடத்தின் ஆன்மீக தூய்மை : ஆன்மீக ரீதியில் தூய்மையற்ற இடத்தில் செய்தால், சடங்கின் செயல்திறன் மற்றும் ஆன்மீக நன்மைகளும் குறைந்தளவே இருக்கும்.
  • தீய சக்திகளின் தாக்குதல்கள் : பல நேரங்களில் தீய சக்திகள் நம் பித்ருக்களின் அதிகளவு பொருள் சார்ந்த ஆசைகளை பயன்படுத்தி அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். பித்ருக்களிடம் ஆன்மீக சக்தி இல்லாததால் அவர்களால் தங்களை காத்துக்கொள்ள முடியாது. சடங்கிலிருந்து பித்ருக்கள் ஆன்மீக நன்மை பெறாமல் இருக்க அத்தகைய தீய சக்திகள் சிரார்த்தத்த்தில் தடைகளை உண்டாக்கும். ஏனென்றால், அவர்கள் மீதுள்ள கட்டுப்பாட்டை தீய சக்திகள் இழக்க விரும்பாது.

3.2 சிரார்த்தத்திற்காக பிண்டத்தை எவ்வாறு தயாரிப்பது?

பித்ரு பட்ச சிரார்த்தத்தின் போது காகங்களுக்கு உணவிடுதலின் மகத்துவம்

சிரார்த்தத்திற்கான பிண்டங்களை (அன்ன உருண்டைகள்) கீழ்வரும் முறையில் தயார் செய்யலாம்.

  1. சாதத்தை (அன்னம்) தயார் செய்யவும். எந்தவித வெள்ளை அரிசியாகவும் இருக்கலாம். பழுப்பு அரிசி (Brown rice) உபயோகிக்கக் கூடாது.
  2. சிறிய அளவில் தயிர், நாட்டு பசு நெய், தேன் மற்றும் கருப்பு எள்ளை சாதத்துடன் கலந்து எலுமிச்சைப்பழ அளவில் உருண்டைகளை தயாரிக்கவும். பிண்டங்கள் திடமான உருண்டைகளாக இருக்கவேண்டும்.
  3. சிரார்த்தத்திற்காக சிறப்பான உணவை ஒருவர் தயார் செய்வதானால் கண்டிப்பாக அது சைவ உணவாக இருப்பது அவசியம். இவ்வுணவுகளிலிருந்து மிகச்சிறிய அளவை எடுத்து பிண்டங்களை தயார் செய்யும் சாதத்துடன் கலக்கலாம்.
  4. முறைப்படி இப்பிண்டங்களை தர்ப்பைப் புல்லில் தான் வைக்கவேண்டும். தர்ப்பை (தாவரவியல் பெயர்: Desmotachya bipinnata) என்ற புல் ஆன்மீக ரீதியில் தூய்மையான நீட்டமான காய்ந்த புல் வகை, சிரார்த்தத்தில் சடங்குகளுக்காக பயன்படுத்தப்படும். வடக்கு-தெற்கு திசையில் தர்ப்பைகளை வைக்கவேண்டும். தர்ப்பை இல்லையெனில் வாழை இலையில் வைக்கலாம். அதுவும் இல்லையெனில் சுத்தமான வெள்ளைக் காகிதத்தில் பிண்டங்களை வைக்கலாம்.

3.3 சிரார்த்தத்திற்காக நைவேத்தியத்தை (சைவ உணவு) எவ்வாறு தயாரிப்பது?

எளிய தூய்மையான சைவ உணவை பித்ருக்களுக்கு அர்ப்பண ரூபமாக படைக்கலாம். உதாரணத்திற்கு, பாரத உணவில் அன்னம், பொரியல், பூரி, தயிர், பருப்பு, ஊறுகாய் மற்றும் இனிப்பு இருக்கும்.

3.4 சிரார்த்தத்திற்காக தர்ப்பண நீர் எவ்வாறு தயாரிப்பது?

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய கருப்பு எள்ளை நீரில் கலந்து அளிக்கவேண்டும். மேலும் அறிய, சிரார்த்தத்தைப் பற்றிய கட்டுரையை படிக்கவும்.

3.5 நம் படைத்த உணவிலிருந்து பித்ருக்கள் ஆன்மீக நன்மை எவ்வாறு பெறுகிறார்கள் என்பதன் ஆன்மீக அறிவியல் என்ன?

பிரச்சனை : பெரும்பாலான பித்ருக்கள், ஆன்மீக பயிற்சி செய்யாததனால், குறைந்த ஆன்மீக நிலையில் ஏராளமான நிறைவேறாத உலக ஆசைகளும் பற்றுகளும் கொண்டுள்ளனர்.  இந்த நிறைவேறாத ஆசைகளும் பற்றுகளும் குறைந்த ஆன்மீக சக்தியுடன் சேர்ந்து அவர்களின் சூட்சும சரீரங்களை மிக கனமாக ஆக்குகிறது. இதனால் அவர்கள் பூலோகத்தை விட்டு புவர்லோகம் போன்ற இதர சூட்சும லோகங்களுக்கு செல்ல முடிவதில்லை. இந்த உலக ஆசைகள் மற்றும் பற்றுகளால் அவர்கள் தீய சக்திகளின் தாக்குதல்களுக்கும் ஆளாகின்றனர். தீய சக்திகள் அவர்களை அடிமைப்படுத்தி, அவர்களின் சந்ததியினரை அவற்றின் (தீய சக்திகளின்) தீய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்துகின்றன – உதாரணத்திற்கு, சந்ததியினரின் உடலை கொண்டு போதை பழக்கம், காம இச்சை ஆகியவற்றை அனுபவிப்பது, பிறருக்கு தீங்கு விளைவிப்பது, ஆன்மீக மாசுப்பாட்டை (ரஜதம) பரப்புவது போன்றவை.

தீர்வு : நைவேத்தியம், பிண்டதானம் மற்றும் தர்ப்பணம் என்பது இந்த ஆன்மீக பிரச்சனையை எதிர்கொண்டு நம் பித்ருக்களின் ஆசைகளை குறைத்து அவர்களது பயணத்தை தொடர ஆன்மீக சக்தியை அளிப்பதற்காக  உருவாக்கப்பட்ட சடங்குகள் ஆகும். தீய சக்திகளின் தாக்குதல்களிலிருந்தும் இச்சடங்குகள் பாதுகாப்பு அளிக்கும். 

இத்தீர்வுக்கு பின்னாலுள்ள ஆன்மீக அறிவியல் :

பித்ரு பட்ச சிரார்த்தத்தின் போது காகங்களுக்கு உணவிடுதலின் மகத்துவம்

பித்ருக்களின் அதிபதியான தெய்வம், மரணத்தின் தெய்வமான யமதர்மராஜா ஆவார். சிரார்த்தம் செய்வது என்றால் பிரம்மாண்டத்தில் உள்ள யம அதிர்வலைகளின் சக்தியை அழைத்து பித்ருக்களின் சூட்சும தேஹத்திற்கு கதி அளிப்பதாகும். இது  தத்தாத்ரேயரின் || ஸ்ரீ குருதேவ தத்த || என்னும் நாமஜபத்தின் மூலம்  சுலபமாக்கப்படுகிறது.

தத்தாத்ரேயருக்கு செய்யப்படும் பிரார்த்தனைகள் மற்றும் ஸ்ரீ குருதேவ தத்த என்ற நாமஜபத்தினால் ஏற்படும் சக்தி இவ்விரண்டும், பிரம்மாண்டத்தில் உள்ள அந்த பித்ருக்களின் சூட்சும தேஹத்துடன் தொடர்புடைய யம அதிர்வலைகளை எடுத்து, பூமியின் சுற்றுப்பாதையில் ஈர்த்து, சிரார்த்த நன்மைகளை அளிக்கின்றன. அதன்படி, ம்ருத்யு லோகத்தில் (இறந்தவர் லோகம்) சிக்கிக்கொண்ட ஏராளமான பித்ருக்களின் சூட்சும தேஹங்கள் பூமியின் சுற்றுப்பாதையில் வரமுடிகிறது. இதனால், தனது சந்ததியினர் பூமியில் நடத்தும் சிரார்த்தத்தின் நன்மையை பெற்று, தங்கள் பயணத்தில் கதி கொடுக்கும் யம அதிர்வலைகளை பெறுகின்றனர்.

செயல்பாட்டில் உள்ள இந்த யம அதிர்வலைகளை சிரார்த்தத்தின்போது அழைத்தால், பித்ருக்களின் சூட்சும தேஹத்தின் சுற்றுப்புறம் செயல்படுத்தப்படுகிறது. பிறகு, யம அதிர்வலைகளின் சக்தியைக்கொண்டு மறுமையின் பயணத்தில் அந்த சூட்சும தேஹம் அடுத்த நிலையை அடைகிறது. இதையே பித்ருக்களின் சூட்சும தேஹம் நற்கதி (கடவுளை நோக்கி செல்லும் பயணத்தில் கதி) அடைவது என்று கூறுவார்கள். நடைமுறையில் அந்த பித்ருவின் சூட்சும தேஹத்திற்கு, கீழே உள்ளபடி ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டவையோ பொருந்தும்:

  • ஆசைகள் குறைவதால், சூட்சும தேஹத்தின் மறுமைப் பயணம் லேசாக ஆகிறது
  • ஆன்மீக கஷ்டம் குறைதல்
  • தனது சந்ததியினருடன் இருக்கும் கர்மாவின் கொடுக்கல்-வாங்கல் கணக்கு குறைதல்
  • இன்னும் மேன்மையான லோகத்தை அடைய ஆன்மீக சக்தி

சிரார்த்தத்தின்போது தர்ப்பணத்துடன் நைவேத்தியமும் பிண்டமும் அளிக்கப்பட்டு பித்ருக்கள் மந்திரங்கள் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் அழைக்கப்படுகின்றனர். (தயைகூர்ந்து கவனிக்கவும், சிரார்த்தத்தில் நைவேத்தியம், அதற்கு அதிபதியான தெய்வங்களுக்கு அளிக்கப்படுகிறது, அவர்களது ஆசீர்வாதத்தால் பித்ருக்கள் ஆன்மீக நன்மை பெறுவார்கள்). நாம் அழைக்கும் உதவி தேவைப்படும் பித்ருக்கள் ரஜ-தம பிரதானமானவர்கள் ஆவர். அதனால் அவர்களிடமிருந்து ஆன்மீக தூய்மையற்ற அதிர்வலைகள் வெளிப்படும். இதன் முக்கிய காரணம் அவர்களின் தாழ்ந்த ஆன்மீக நிலை மற்றும் ஏராளமான உலகிய  ஆசைகள் ஆகும். இதன் விளைவாக, படைத்த உணவை இடும் சிரார்த்த இடத்தில் அவர்கள் வரும்போது, அதன் சுற்றுச்சூழல் முற்றிலும் ஆன்மீக ரீதியில் கஷ்டமளிக்கும் ரஜ-தம அதிர்வலைகளால் உருவேறுகிறது. அதனால், நைவேத்தியம், பிண்டம் மற்றும் தர்ப்பணமும் ரஜ-தம அதிர்வலைகளால் உருவேறுகின்றன.

வெறும் உணவும் தண்ணீரும் அளிப்பதால் ஒருவரது பித்ருக்களின் ஆசைகளை எவ்வாறு குறைக்க உதவும் என சிலர் யோசிக்கலாம். காரணம் என்னவென்றால், இவை வெறும் உணவும் நீருமாய் இருப்பினும், மந்திரங்களின் சக்தி, ஸ்ரீ குருதேவ தத்த என்ற நாமஜபம் மற்றும் சிரார்த்தம் செய்யும் கர்த்தாவின் ஆன்மீக உணர்வு ஆகியவற்றால் இவை உருவேறியுள்ளன.  சிரார்த்தத்தன்று பரிபூரண வாயு தத்துவம் மூலமாக சூட்சும தேஹங்கள் நைவேத்தியத்தை உண்பதனால் திருப்தியடைகிறார்கள். கூடுதலாக, அன்னம் மற்றும் கருப்பு எள் போன்ற பண்டங்களின் கலவை பித்ருக்களை ஈர்த்து ஆன்மீக சக்தியை அவர்களுக்கு அளிக்கிறது. பித்ரு பட்ச மஹாளய சிரார்த்தத்தன்று அளிக்கப்படும் ஒவ்வொரு பிண்டமும் பரம்பரையின் ஒரு குறிப்பிட்ட மூதாதையருக்கு (வேதங்கள் மற்றும் உபநிடதங்கள், இதிகாசங்கள் போன்ற பிற தர்ம க்ரந்தங்கள் கூறியது போல்) உதவவே ஆகும். அதனால் தான் பிண்டதானத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை அன்ன உருண்டைகள் அளிக்கப்படுகிறது.

பிண்டத்தில் கருப்பு எள்ளின் மகத்துவம் என்ன?

கருப்பு எள்ளிலிருந்து ரஜ-தம (ஆன்மீக தூய்மையற்ற) பிரதானமான அதிர்வலைகள் வெளிப்படும். சிரார்த்தத்தின்போது ஓதப்படும் மந்திரங்கள் கருப்பு எள்ளின் ரஜ-தம பிரதானமான சக்தியை செயல்படுத்தி பித்ருக்களின் ரஜ-தம பிரதானமான சூட்சும தேஹங்களை பூமியின் சுற்றுப்பாதையில் ஈர்க்க உதவுகிறது. இச்செயல்முறை சூட்சும தேஹங்களுக்கு சிரார்த்த இடத்தில் கருப்பு எள்ளின் ரஜ-தம பிரதானமான சக்தியின் உதவியால் வருவதற்கு எளிதாக்குகிறது. இந்த ரஜ-தம அதிர்வலைகளால் காகங்களும்  ஈர்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, படைத்த உணவில் உள்ள இந்த அதிர்வலைகளால் காகங்களும் ஈர்க்கப்படுகின்றன. கருப்பு எள்ளிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகளால் பித்ருக்களின் சூட்சும தேஹத்தை சுற்றியுள்ள ஆசை பிரதானமான கோசம் செயலுற்று, சிரார்த்தத்தில் தனது பங்கை உண்டவுடன் திருப்தியடைகிறது.

இங்கே காக்கை எவ்வாறு பொருந்துகிறது?

பித்ரு பட்ச சிரார்த்தத்தின் போது காகங்களுக்கு உணவிடுதலின் மகத்துவம்

காக்கை என்பது மரணம் மற்றும் பித்ருக்களின் சூட்சும தேஹத்துடன் தொடர்புடைய சிறப்புப் பறவையாகும். இதற்கு சில காரணங்கள் பின்வருமாறு:

  • பித்ருக்களுள் யம அதிர்வலைகள் உண்டு, அதே யம அதிர்வலைகள் காகங்களிலும் இயல்பாகவே உண்டு.
  • உதவி தேவைப்படும் பித்ருக்களை போல் காகமும் ரஜ-தம பிரதானமானது. காகத்தின் கருப்பு நிறம் இதை குறிக்கிறது.
  • காகங்களுக்கு பித்ருக்களின் சூட்சும தேஹங்களை காணும் மற்றும் உணரும் சூட்சும திறன் உண்டு.
  • பொருந்தக்கூடிய அதிர்வலைகளின் காரணத்தால், ஒரு பித்ரு காகத்திற்குள் புகுந்து, அதன் உடலின் உதவியால் உணவு மற்றும் தண்ணீரை அருந்தி, ஆன்மீக சக்தியை பெற முடியும்.
  • கூடுதலாக, மரணத்திற்கு பிறகு ஒருவரது ஸ்தூல தேகம் இருப்பதில்லை, அதனால் சூட்சும தேஹத்தை சுற்றியுள்ள கோசத்தின் பரிபூரண நில தத்துவ விகிதம் குறைந்து பரிபூரண நீர் தத்துவ விகிதம் உயர்கிறது. அதனால், பித்ருக்களின் சூட்சும தேஹத்தை சுற்றியுள்ள கோசத்தில் அதிகளவு சூட்சும ஈரப்பதம் உள்ளது. காக்கையை சுற்றியுள்ள சூட்சும கோசமும் பரிபூரண நீர் தத்துவம் பிரதானமானது, இதனால் (நீர் தத்துவ பிரதானமான) சூட்சும தேஹத்தால் காகத்தின் உடலில் நுழைவது எளிதாகிறது.

3.6 சிரார்த்தத்தன்று காக்கைக்கு உணவளிப்பதன் ஆன்மீக மகத்துவம் என்ன?

காக்கைக்கு உணவு படைப்பதன் மூலம் பித்ருக்கள் ஆன்மீக நன்மைகளை எவ்வாறு பெறுகிறார்கள் என்று கட்டுரையின் இந்தப் பகுதி விளக்குகிறது.

பித்ரு பட்சத்தில் (மஹாளய பட்சம்) காக்கைகள் அதிகளவு செயல்படுகின்றன.  பல நேரங்களில் அவை அதிக அளவில் கரைவதையும் கேட்கலாம் மற்றும் அதிக எண்ணிக்கையில் கூடுவதையும் காணலாம். சிரார்த்தம் செய்யும்போது பித்ருக்கள் அழைக்கப்பட்டு அவர்கள் அவ்விடத்திற்கு வருவார்கள், நைவேத்தியமும் பிண்டமும் யம மற்றும் ரஜ-தம அதிர்வலைகளால் உருவேறுகின்றன காகமும் இதேபோன்ற அதிர்வலைகளைக் கொண்டிருப்பதால், இந்த யம மற்றும் ரஜ-தம அதிர்வலைகளால் ஈர்க்கப்பட்டு அவ்விடத்திற்கு வருகிறது. சிரார்த்தச் சடங்கு முடிந்தபின் பித்ருக்களுக்கு தெய்வங்கள் மூலம் அளித்த நைவேத்தியமும் பிண்டமும் ஓடும் நீரில் விடப்படுகிறது. எனினும் காகங்களுக்காகவே தனி நைவேத்தியம் வைக்கப்படுகிறது. சிரார்த்தம் முடிந்தவுடன் காக்கைகள் உண்பதற்காக வீட்டிற்கு வெளியே அது வைக்கப்படுகிறது.

இந்நிலையில் காகம் படைத்த உணவை உண்பதில் இரண்டு விதமான நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உள்ளது :

  • ஒருவகையில், பித்ருக்களுக்கு தேவையான ஆன்மீக சக்தி இல்லாததால் படைத்த உணவை ஏற்க காகத்தின் உடலில் நுழைய வேண்டியுள்ளது.
  • மற்றொரு வகையில், பித்ருக்களுக்கு கொஞ்சம் ஆன்மீக சக்தி இருக்கும் பட்சத்தில், அதனால் சூட்சும ரீதியில் உணவின் ஆன்மீக நன்மைகளை நேரடியாக பெற முடியும். தேவையான ஆன்மீக சக்தியை நேரடியாக பெற முடிவதால் அவர்களுக்கு காகத்தின் உதவி தேவையில்லை.

காகம் நைவேத்தியத்தை நோக்கி வரும் வேகம், சிரார்த்தத்தில் அழைத்தபடி பூமியின் சுற்றுப்பாதையில் நுழையும் சூட்சும தேஹத்தின் வேகத்தை ஒத்திருக்கும். நைவேத்தியத்தை காக்கை உண்பது பித்ருவின் சூட்சும தேஹம் இரு விதத்திலும் திருப்தி அடைந்ததை குறிக்கிறது – ஸ்தூல நிலையில், நைவேத்தியத்தை காக்கையின் மூலம் உண்பதன் மூலம் மற்றும் சூட்சும நிலையில், உணவிலிருந்து வெளிப்படும் சூட்சும வாயுவை உட்கொள்வதன் மூலம். மறுமையில் பயணத்தை தொடர பித்ருக்களின் சூட்சும தேஹத்திற்கு இது சக்தி அளிக்கிறது. ஆகையால், சிரார்த்தத்தில் காக்கை, நிறைவேறாத ஆசைகளுடன் உள்ள பித்ருக்களின் சூட்சும தேஹத்திற்கும் மனிதர்களுக்கும் (சந்ததியினர்) நடுவில் ஒரு ஊடகமாக திகழ்கிறது.

3.7 சிரார்த்தத்திற்கு பிறகு அளித்த உணவை காக்கைகள் உண்ணாமல் இருந்தால் என்ன பொருள்?

சில நேரங்களில் நைவேத்தியம் அளிக்கும்போது காக்கைகள் உணவை உண்பதில்லை. ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்பதற்கான சில சந்தர்ப்பங்களை கீழே கொடுத்துள்ளோம்:

  1. அந்த மறைந்த மூதாதையருக்கு தன் இஷ்டப்படி சந்ததியினர் நடந்து கொள்ளவில்லை அல்லது வேறு காரணங்களுக்காக அவர்கள் மீது வருத்தமிருந்தால், மறைந்த மூதாதையரின் சூட்சும தேஹம் மாரக சக்தியை (அழிக்கும் சக்தி) வெளிப்படுத்துவதால், இது காக்கைகளை பயமுறுத்தி விரட்டிவிடும். இந்நிலையில் காக்கைகள் அங்கேயே பறந்துக்கொண்டு இருந்தாலும் உணவை சாப்பிடாது.
  2. பித்ருக்களின் சூட்சும தேஹத்தை அடிமைப்படுத்தியுள்ள தீய சக்திகளும் கூட அவர்களை காகத்தின் மூலம் சடங்கின் ஆன்மீக நன்மைகளை பெற விடாமல் தடுக்கலாம்.
  3. சில நேரங்களில், ஏராளமான நிறைவேறாத ஆசைகள் மற்றும் பந்தங்கள் இருப்பதால், பித்ருக்கள் பூலோகத்தை விட்டு வெளியேற செய்யப்படும் அனைத்து உதவிகளையும் மறுப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக இத்தகைய பித்ருக்களின் ஆசைகள் என்பது முடிவில்லா பள்ளத்தைப்போல திருப்தியே படுத்த முடியாது. அதனால் அவர்கள் எப்போதுமே துக்கமாக இருப்பார்கள். அந்த பித்ருக்களின் சூட்சும தேஹம் அளித்த நைவேத்தியத்தையே சுற்றி வரும், அதிலிருந்து ஆன்மீக நன்மையை ஏற்காது. அவர்கள் அங்கிருந்து போகாததனால், சூட்சும பார்வை கொண்ட காகம் அவர்கள் அங்கேயே சுற்றிவருவதை பார்த்து நைவேத்தியத்தை உண்ண வராது.
  4. நைவேத்தியம் அளிக்கும்போது பித்ருக்களுடன் மற்ற சூட்சும தேஹங்களும் வரக்கூடும். இந்த சூட்சும தேஹங்கள் மறுமையில் அக்குடும்பத்தின் நலம் விரும்பிகளாகவோ அல்லது எதிரிகளாகவோ இருக்கலாம். எதிரிகளான சூட்சும தேஹங்கள் அதிகளவு இருந்தால், அவர்கள் காகத்தை நைவேத்தியம் உண்ண அனுமதிப்பதில்லை, ஏனென்றால் பித்ருக்கள் ஆன்மீக நன்மையை பெற அவர்கள் விரும்புவதில்லை.
  5. ஒருவேளை பெரும்பாலான பித்ருக்கள் தவறாமல் ஆன்மீக பயிற்சி செய்து அதிக ஆன்மீக நிலை அடைந்திருந்தால், அவர்களுக்கு காக்கையின் உதவி தேவையில்லை. படைத்த உணவின் ஆன்மீக நன்மையை நேரடியாக சூட்சும முறையில் அவர்கள் பெறமுடியும். அதுமட்டுமின்றி, அத்தகைய பித்ருக்களின் சூட்சும தேஹங்கள் தெய்வங்கள், நல்ல சக்திகள் மற்றும் கடவுளால் உதவப்படுவார்கள். அவ்விடத்தில் நேர்மறை ஆன்மீக சக்தி உருவாவதால், ரஜ-தம பிரதானமான (ஆன்மீக தூய்மையற்ற) காகங்கள் அங்கே வராது.

3.8 பித்ருக்களுக்கு அளித்த உணவின் பலன் எத்தனை காலம் நீடிக்கும்?

பித்ரு பட்சத்தில் அளித்த உணவின் விளைவு ஓராண்டு காலம் நீடிக்கும். அதனால், ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் அவரின் பித்ருக்களுக்காக மஹாளய சிரார்த்தம் செய்வது அவசியமாகும். பல்வேறு சிரார்த்த வகைகளுண்டு. ஆனால், மஹாளய சிரார்த்தம் என்பது ஒவ்வொரு ஆண்டும் பித்ரு பட்சத்தில் (மஹாளய பட்சம்) அளிக்கப்படும் சிரார்த்தமாகும்.

3.9 உங்கள் பகுதியில் காகங்கள் இல்லையெனில் என்ன செய்வது?

சில நேரங்களில், குளிர் பிரதேசங்கள் அல்லது பாலைவனப் பகுதி போன்ற தீவிரமான தட்பவெப்பநிலை கொண்ட நாடுகளில் மக்கள் வசிக்கலாம், அங்கே காகங்கள் இருக்காது. அச்சமயத்தில், ஒருவர் சிரார்த்தம் செய்து நைவேத்தியம் அளித்து, சூட்சும முறையில் பித்ருக்கள் ஆன்மீக நன்மைகளை பெறவேண்டும் என பிரார்த்திக்கலாம். இங்கு நைவேத்தியம் அளிக்கும் சந்ததியினரின் ஆன்மீக உணர்வு மிக முக்கியமாகும்.

3.10 காகங்கள் நைவேத்தியத்தை சாப்பிடவில்லை என்றால் என்ன செய்யவேண்டும்?

நைவேத்தியம் அளிப்பதற்கான உகந்த நேரம் பிற்பகல் ஆகும். நைவேத்தியம் அளித்த பிறகும் காக்கைகள் அதை சாப்பிடவில்லை எனில், ஒருவர் சூரியன் அஸ்தமிக்கும் வரை பொறுத்திருந்து கீழ்வரும் முறைகளில் உணவை அப்புறப்படுத்த வேண்டும்:

  • ஓடும் நீரில் விடவும்.
  • அது முடியாமல் போனால், தோட்டத்தில் (முடிந்தால் துளசி செடிக்கு அருகில்) புதைக்கவும்.
  • இவை ஏதும் செய்ய முடியாத போது, நன்றி செலுத்தும் ஒரு பிரார்த்தனையை செய்து, தூய்மையான பையில் உணவை போட்டு, குப்பைத்தொட்டியில் வைக்கவும்.

3.11 ஒருவேளை புரோஹிதர் மூலம் தகுந்த மந்திரங்களுடன் சிரார்த்தம் செய்ய முடியவில்லை எனில் நான் என்ன செய்வது?

இக்கட்டுரையை படித்த நம்மில் சிலருக்கு சிரார்த்தம் செய்ய புரோஹிதர்கள் கிடைப்பது கடினமாகலாம். அந்நிலையில் சில எளிய வழிமுறைகளை எங்கள் பிரதான சிரார்த்த கட்டுரையில் கொடுத்துள்ளோம். சிரார்த்தத்தின் பகுதியாக நாம் என்ன செய்தாலும், அதன் மூலமாக நம் பித்ருக்கள் உதவப்படுவர் என்பதை  உறுதி செய்யும் முக்கிய அம்சம் நம் ஆன்மீக உணர்வே ஆகும் என்பதை தயைகூர்ந்து நினைவில் கொள்ளுங்கள். மேலும், ஸ்ரீ குருதேவ தத்த என்ற நாமஜபமும் நம் பித்ருக்களுக்கு பெருமளவில் உதவும். அதனால் சிரார்த்தம் செய்ய புரோஹிதர்கள் கிடைக்கவில்லை என்பதற்காக வருந்தாதீர்கள்.

இருப்பினும், தயைகூர்ந்து உங்கள் தகுதிக்கேற்ப சிரார்த்தத்தை செய்யவும், ஏனெனில் மறுமையில் உங்கள் பித்ருக்களுக்கு உதவ இது ஒரு முக்கியமான வழியாகும். சிரார்த்தம் என்பது எந்தவொரு கலாச்சாரத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு ஆன்மீக அறிவியல் ஆகும். மாறாக, மறைந்தவர்கள் சமாதியில் மலரஞ்சலி செலுத்துவது, அவரது படத்திற்கு மாலை போடுவது போன்ற பொதுவான வழக்கங்கள் எந்தவித ஆன்மீக நன்மைகளையும் தராது, இன்னும் சொல்வதென்றால் இவை மறுமையில் அவர்களது பயணத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆண்டிற்கு ஒருமுறையே பித்ரு பட்சம் வரும். நீங்களும் உங்கள் பித்ருக்களும் ஆன்மீக நன்மைகள் பெற தயவுகூர்ந்து இதை பயன்படுத்திக் கொள்ளவும். குறைந்தபட்சத்தில், ஸ்ரீ குருதேவ தத்த என்ற நாமஜபத்தையாவது மஹாளய பட்சம் முழுவதும் முடிந்தவரை அதிகளவு செய்யவும்.

4. முடிவுரை

சிரார்த்தம் என்பது நம் பித்ருக்களுக்கு மட்டுமின்றி, சந்ததியினராகிய நமக்கும் ஒரு முக்கிய சடங்காகும், இது நம்மை பித்ருதோஷத்திலிருந்து பாதுகாக்கிறது. சிரார்த்தம் செய்வதால் பித்ருக்களின் சூட்சும தேஹத்தை சுற்றியுள்ள ஆசைகளின் கோசம் பலவீனமாகும். சிரார்த்த சடங்கு, மந்திரங்களின் சக்தியால் பித்ருக்களின் சூட்சும தேஹங்களை லேசாக ஆக்கி அவர்களுக்கு மறுமையில் கதி அளிக்கிறது. மறுமையில் பித்ருக்களின் நல்வாழ்வுக்காக நாம் பங்காளித்தோம் மற்றும் அவர்கள் பயன் அடைந்ததற்கான கண்கூடான ஆதாரம்காகங்கள் நைவேத்தியத்தை உண்பதாகும். காகம் நைவேத்தியத்தை உண்பது என்பதே  மறுமையில் உள்ள நம் பித்ருக்களுக்கு மிக அருகில் நாம் செல்லக்கூடிய வழியாகும். நைவேத்தியத்தை உண்ண வரும்  எந்தவொரு காகமும் நமது அன்பான பித்ருக்களில் ஒருவரை குறிக்கலாம், அவர்கள் பயனடைந்தார்கள் என்று தெரிந்து நாமும் திருப்தி அடைகிறோம். நம் பித்ருக்களுக்கு உதவ இத்தகைய ஞானமும் வழிமுறைகளும் கொடுத்ததற்காக நமது பண்டைய காலத்து மாமுனிவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.