ஜோதிடத்தின் துல்லியம், ஒரு ஆன்மீக கண்ணோட்டம்
சுருக்கம்

ஜோதிட சாஸ்திரத்தால், நவீன விஞ்ஞானத்திற்கு  அப்பாற்பட்ட, சூட்சும உலகம் மற்றும் விதியின் அம்சங்களையும் உணர முடியும் என்பது பாராட்டத்தக்கது. ஆன்மீக ஆராய்ச்சி முறை மூலம் நாம் ஜோதிடத்தின் துல்லியம் அதிகபட்சம் 30% என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். ஒரு ஜோதிடர் தன் பகுத்தாய்ந்து பொருள் கொள்ளும் திறனையும், சூட்சும துல்லியத்தையும் ஆன்மீக பயிற்சி செய்வதால் மட்டுமே அதிகரிக்க முடியும்.

அட்டவணை

1. ஜோதிடத்தின் துல்லியத்திற்கான அறிமுகம்

பண்டைய காலந்தொட்டே, வான்வெளி மண்டலத்திலுள்ள கோள்களால் வருங்கால வரைபடத்தைத் தர முடியும் என்ற விஷயம் மனிதகுலத்தை கவர்ந்திழுத்துள்ளது. ஜோதிடத்தின் மீதுள்ள மனிதகுல ஈர்ப்பு, செய்தித்தாளில் வெளியாகும் இராசி பலன்களை பார்ப்பதிலிருந்து துவங்கி, வாழ்வின் முக்கிய தீர்மானங்களான திருமணம், பொருளாதாரம், மருத்துவம் போன்றவற்றிற்கு ஜோதிடரை நாடுவது வரை நீள்கிறது. சரித்திரத்தின் போக்கையே திசை திருப்பக் கூடிய முக்கிய தீர்மானங்களை சில அரசியல் தலைவர்கள் ஜோதிடர்களின் உதவி கொண்டு தீர்மானித்துள்ளனர் என்பது தெரிந்த விஷயம்.

எதிர்காலத்தை கணிக்க அல்லது முடிவெடுக்கும் கருவியாக பயன்படுத்தும்போது,  ஜோதிடத்தின் துல்லியம் என்ன? இக்கேள்விக்கான பதிலை தெளிவாக்கவும் ஜோதிடத்தின் துல்லியம் மற்றும் அதை பாதிக்கக்கூடிய அளவுருக்கள் பற்றிய ஆன்மீக கண்ணோட்டம் தரவும் ஆன்மீக ஆராய்ச்சி முறைகளைப் பயன்படுத்தியுள்ளோம்.

ஜோதிடத்தின் சிறப்பு என்னவென்றால், ஜோதிடர்கள், பிறந்த நேரம் மற்றும் பிறப்பிடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகை போன்ற மிக குறைந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மக்களின் விதியை புரிந்து கொள்ள முயற்சிப்பதுதான். ஜோதிடர், ஒரு குறிப்பிட்ட வியாதி அல்லது திருமணம் கைகூடாதது போன்ற கஷ்டத்திற்கான ஜோதிட காரணம், ஒரு வியாபார முயற்சியை அல்லது வேறு தனிப்பட்ட முயற்சியை  துவங்குவதற்கான சிறந்த நேரம் மற்றும் தேசிய பிரச்சினைகள் போன்ற வாழ்க்கையின் சில அம்சங்களைப் பற்றி கூற முயற்சிக்கிறார்.

ஆன்மீகத்தின்படி, பிறப்பிற்கு முன்பே நிர்ணயிக்கப்படும் நம் வாழ்வின் பகுதி விதி எனப்படுகிறது. நம் பெற்றோர்கள், நாம் திருமணம் செய்துகொள்ளும் நபர் அல்லது நமக்கு வரக்கூடிய பயங்கர நோய் போன்ற நம் வாழ்வின் அனைத்து முக்கிய நிகழ்வுகளும்  முன்விதிக்கப்பட்டுள்ளன. விதி என்பது இயல்பாகவே ஒரு ஆன்மீக விஷயம் என்பதால் அதை ஐம்புலங்கள், மனம் மற்றும் புத்தியால் புரிந்து கொள்ள முடியாது.

தங்கள் ஜோதிட சாஸ்திரத்தையும், உள்ளுணர்வையும்1 பயன்படுத்தி நம் விதியை கணிக்க முடியும் என்ற ஜோதிடர்களின் கூற்று எங்களின் ஆர்வத்தை தூண்டியதால், ஜோதிட அறிவியலை ஆய்வு செய்வதற்கு முடிவு செய்தோம்.

1 பகுதி 5.5.2 பார்க்கவும்

2. ஜோதிடம் பற்றி

2.1 ஜோதிடம் என்றால் என்ன?

இந்த விஷயத்தை மக்கள் புரிந்து கொள்ளும் அடிப்படையில் ஜோதிடத்திற்கு பல்வேறு வரையறைகள் உள்ளன என்று நாங்கள் கண்டோம். அவை பின்வருமாறு:

ஜோதிடம் என்பது மிக விரிவான பரந்த ஞானத்தை உள்ளடக்கியது. இது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலையை அடிப்படையாகக் கொண்ட மிக சிக்கலான கணக்குகள் மற்றும், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைக்கும் மனித வாழ்வை உள்ளடக்கிய பூமியிலுள்ள நிகழ்வுகளுக்கும் இடையேயான தொடர்புகள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியது. (தகவல்: vedic.indastro.com, 2006)

“ஜோதிடம், பிரபஞ்சத்தின் சட்டங்கள் மற்றும் பிரபஞ்சம் ஏன் உள்ளது என்பது பற்றிய விளக்கங்களை தருவதில்லை. எளிய வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், ஜோதிடம், அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது என்று காட்டுகிறது. சுருக்கமாக, பிரபஞ்சம், ஒரு லயப்படி செயல்படுகிறது, மனித வாழ்க்கையும் அந்த லயத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறது.” (ஹென்றி மில்லர் – தகவல்: elore.com, பிப்ரவரி 2006)

ஜோதிடம் ஒரு பழமையான நடைமுறை. நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலை, மக்களின் மீதும் நிகழ்வுகளின் மீதும்நேரடியான பாதிப்பை ஏற்படுத்துவதாக அது கருதுகிறது. அதன்படி, ஒருவரின் பிறப்பின் போது உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைக்கு ஏற்றவாறு ஒருவரின் வாழ்க்கைப் பயணம் தீர்மானிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதை சாதிக்க முயற்சிக்கும் விளக்கப்படமே ஜாதகம் என்று அழைக்கப்படுகிறது. (ஹென்றி மில்லர் – தகவல்: elore.com, பிப்ரவரி 2006)

நாங்கள் கண்டறிந்த மிகவும் பொதுவான சொற்றொடர்களில் சில:

நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைக்கும் மனித வாழ்வை உள்ளடக்கிய பூமியிலுள்ள நிகழ்வுகளுக்கும் இடையேயான தொடர்பு.

அண்டத்திற்கும் பிண்டத்திற்குமான தொடர்பு.

நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலை, மக்களின் மீதும் நிகழ்வுகளின் மீதும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஜாதகத்தின் வரையறையில் பல மாறுபாடுகள் இருந்தாலும், ஒவ்வொரு ஜாதகத்திற்கும் பிறந்த நேரமும், பிறந்த இடமும் (பிறப்பிடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை) அவசியம் என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது.

2.2 ஜோதிடம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

ஆராய்ச்சியின் மூலம், ஜோதிடத்தில் பல வகைகள் உள்ளன என்பதை அறிந்தோம் மற்றும் அவற்றின் முக்கிய உபயோகம் பின்வருமாறு:

உபயோகம் பொருள்
கணிப்பு என்ன நடக்க போகிறது என்பதை தெரிந்து கொள்வது
கண்டறிதல்

கடுமையான மருத்துவக் கோளாறுகளை தீர்ப்பதற்காக  அல்லது இன்னும் சொல்லப் போனால், வாழ்க்கையின் எந்தவொரு அம்சத்தையும் பாதிக்கும் கஷ்டத்தின் மூல காரணத்தை புரிந்து கொள்ள உதவும் கருவியாக செயல்படுவது. உதாரணமாக, ஒரு நபர், தனக்கு நல்ல வருமானம் இருந்தாலும் தொடர்ந்து ஏன் நிதி சிக்கல்களை எதிர்கொள்கிறார் என்று ஒரு ஜோதிடரிடம் கேள்வி கேட்கலாம்.

அடிப்படை இயல்பு மற்றும் பொருந்தங்கள்

ஒருவரின் அடிப்படை இயல்பை புரிந்து கொள்ளுதல் மற்றும் தொழில் பொருத்தம் அல்லது வாழ்க்கைத்துணையிடம் (இருவரின் இராசி மற்றும் ஜாதகத்தின் அடிப்படையில்) பொருத்தம் உள்ளதா என புரிந்து கொள்ளுதல்.

முடிவெடுத்தல்

திருமணம் போன்ற ஒரு திட்டமிட்ட நிகழ்விற்கான பரிந்துரைக்கப்படும் நல்ல நேரம் அல்லது ஒரு வியாபாரத்திற்கான திறப்பு விழா நேரம் அல்லது எப்போது திருமணம் செய்வது போன்ற ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு பதில் அளிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

ஆன்மீக கண்ணோட்டத்தைப் பற்றிய பின்வரும் பகுதியில், ஜோதிடத்தின் இந்த உபயோகங்களின் துல்லியத்தைப் பற்றிய விவரங்களை அளித்திருக்கிறோம்.

மேலும், நமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் யாரிடம் செல்கிறோம் என்பதைப் பொருத்து, பிரச்சினையின் காரணங்களை விசாரணை செய்யும் வகையும் வித்தியாசப்படும். ஒரு சமஸ்கிருத வசனம் உள்ளது, அதன்படி பிரச்சனை உள்ளபோது :

ஆயுர்வேத மருத்துவரை ஒருவர் ஆலோசிக்கிறார் என்றால், அவர் (ஆயுர்வேத மருத்துவர்), இது பித்தம், கபம், வாதம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக இருப்பதாக கூறுவார்.

ஒரு ஜோதிடரை ஒருவர் ஆலோசிக்கிறார் என்றால், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் ஒரு குறிப்பிட்ட நிலை காரணமாக இருப்பதாக அவர் கூறுவார்.

ஒரு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றால், அது உடலின் சில பகுதிகளை பாதிக்கும் நோயால் தான் ஏற்படுகிறது என்று கூறுவார்

உயர் ஆன்மீக நிலையில் இருப்பவரிடம் ஆலோசனை பெற்றால், அது விதியின் காரணமாக ஏற்படுவதாக கூறுவார்.

எனவே நோயை கண்டறியும் வகைகளில் எதை நம்புவது?

ஆன்மீகத்தின்படி, இவை அனைத்துமே உண்மை. ஏனென்றால், இந்த பதில்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை அல்ல. மாறாக, இவை ஒரு கஷ்டத்தின் பின்னால் உள்ள காரணத்தை வெவ்வேறு முறைகளின் அடிப்படையில், வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, விதியின் படி நடக்கப்போவதை, நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைக்கு ஏற்றவாறும் விளக்கலாம்.

3. ஜோதிடத்தின் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்திற்கு எதிரான நவீன விஞ்ஞானத்தின் வாதங்கள்

பகுதி 2.1 -ல் மேலே கொடுக்கப்பட்ட ஜோதிடத்தின் வரையறைப்படி, எதிர்கால கணிப்புகள் சாத்தியம் எனும் கூற்று பெரும் பரிணாமத்தை ஏற்படுத்தக் கூடியது.  இருப்பினும், அது சில மதங்களிடமிருந்தும், நவீன விஞ்ஞானமிடமிருந்தும் அதன் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை மீது வலுவான எதிர்ப்பை சந்தித்துள்ளது. நவீன விஞ்ஞானம் ஜோதிடத்தை ஒரு போலி அல்லது பெயரளவு அறிவியல் என்று குறிப்பிடுகிறது.

ஆய்வுகள் நடத்தப்பட்டதிலிருந்து, ஜோதிடத்திற்கு எதிராக பல பொதுவான எதிர்ப்புகளை நாங்கள் கண்டோம். ஜோதிடத்தின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்கு எதிரான நவீன விஞ்ஞானத்தின் சில முக்கிய வாதங்கள்:

3.1 தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் என்பது என்ன?

கிரகங்களின் நிலை (அண்டம்), மனிதனின்  நிலையில் (பிண்டம்) ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, அவனிடம் அதற்கேற்ற பிரதிபலிப்பான செயற்பாட்டை உருவாக்குகிறது என்றால்,  பிரபஞ்சத்தின் கைப்பாவையாக மனிதன் விளங்குகிறான் என்றும், அவனது வாழ்க்கை மற்றும் செயல்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாக, மாற்ற முடியாதவையாக ஆகிறது என்றும் அர்த்தமாகிறது. அப்படி என்றால், ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தின் பங்கு என்ன?

ஆன்மீக கண்ணோட்டம் : மனிதனின் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தின் பின்னாலுள்ள ஆன்மீக கண்ணோட்டத்திற்கு பகுதி  5.1-ஐ தயவு செய்து பார்க்கவும்.

3.2 பொருள் கொள்வதில் தரப்படுத்துதல் இல்லை

ஜோதிடத்தின் பல அமைப்புகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று நேர்மாறாக முரண்பட்டதாக உள்ளன. பொருள் கொள்வதை தரப்படுத்துவதில் எல்லா அமைப்புகளிடையே ஒற்றுமை இல்லை. உதாரணத்திற்கு, ஒரு சீன ஜோதிடர் ஒரு ஜாதகத்தை பொருள் கொள்வது போல் மேற்கத்திய ஜோதிடர்கள் கொள்வதில்லை.

ஆசிரியர் எஸ்.எஸ்.ஆர்.எஃப்: இது ஒரே மாதிரியான பொருள்விளக்கம் பற்றிய  பிரச்சினை அல்ல என வாதிடப்படுகிறது. இங்கு முக்கியம் என்னவென்றால், அவர்களின் கணிப்புகள் ஒரே மாதிரி இருக்கின்றனவா என்பதுதான்.

3.3 மிகவும் பொதுப்படையானது

நடத்தை மற்றும் ஆளுமை பற்றிய பெரும்பாலான கணிப்புகள் மிகவும் பொதுப்படையாக இருப்பதால், அவற்றில் ஒரு பகுதியாவது துல்லியமாக இருப்பதில் சிறப்பு ஏதும் இல்லை.

ஆன்மீக கண்ணோட்டம்: துல்லியமான கருத்துக்கு பின்னுள்ள ஆன்மீக கண்ணோட்டம் என்பதற்கு தயவுசெய்து பகுதி 5.4 -ஐ பார்க்கவும்.

3.4 அனைத்து கிரகங்களையும் பயன்படுத்துவதில்லை

நமது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது ஜோதிடம். இருப்பினும், பெரும்பாலான ஜோதிட வரைபடங்கள் நமது சூரிய மண்டலத்தில் (சூரியனும் சந்திரனும் உட்பட) ஏழு கிரகங்கள் உள்ளன என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. பூர்வ காலங்களில், யுரேனஸ், நெப்டியூன் மற்றும் ப்ளூட்டோ ஆகிய கிரகங்கள்  கண்களால் பார்க்க முடியாதவையாக இருந்தன. இதன் விளைவாக, ஜோதிடர்கள், பூமியைச் சுற்றி வருவதாக அவர்கள் நம்பிய ஏழு கிரகங்கள் மீது தங்கள் அமைப்பை அடிப்படையாகக் கொண்டனர்.

அக்காலத்திற்கு பிறகு, பூமியை அல்ல, மாறாக சூரியனை மையமாக வைத்தே நமது சூரிய குடும்பம் செயல்படுகிறது என்பதும் சூரிய குடும்பத்தில் இன்னும் மூன்று கிரகங்கள் உள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஜோதிடக் கோட்பாட்டின்படி (கிரகங்களின் நிலை, மனித நடத்தை மற்றும் நிகழ்வுகளின் மீது ஒரு நிச்சியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது), முன்னர் அறியப்படாத மூன்று கிரகங்களும் கூட நடத்தையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதால், துல்லியமாக ஒரு ஜாதகத்தை கணிக்க இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த மூன்று கிரகங்கள் கருத்தில் கொள்ளப்படாததால், ஜோதிடக் கோட்பாட்டில் பிழை உள்ளது. ஏனென்றால், எல்லா கிரகங்களையும் அவற்றின் தாக்கத்தையும் கருத்தில் கொள்ளாமல் துல்லியமான ஜாதகம் எந்த முறையிலும் கணிக்க  முடியாது.

ஆசிரியர் எஸ்.எஸ்.ஆர்.எஃப்: வேதிய ஜோதிடம் போன்ற மரபுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தன என்பதையும், அந்த காலத்திலேயே, வானியல் பற்றியும் மேலே கூறப்பட்ட உண்மைகளை பற்றியும் ஆழமான புரிதல் இருந்தது என்பதையும் நிரூபிக்க சான்றுகள் உள்ளன. பகுதி 5.3 -ஐ பார்க்கவும்.

3.5 நட்சத்திர கூட்டத்தின் நகர்வுகள்

நட்சத்திர கூட்டங்கள் நகர்கின்றன என்பதால் ஜோதிடம் விஞ்ஞான பூர்வமானது இல்லை என்பதாகிறது. ஆரம்பகால வானியல் அறிஞர்கள் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே, அவர்களது கணிப்பில் இதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆதியில், இராசி மண்டலத்தின் பன்னிரண்டு ராசிகள், அதே பெயர்களிலுள்ள பன்னிரண்டு நட்சத்திர கூட்டங்களுடன் ஒத்திருந்தன. இருப்பினும் வானிலை மாற்றத்தால், நட்சத்திர கூட்டங்கள் கடந்த 2000 ஆண்டுகளில் நகர்ந்துள்ளன. அதாவது, கன்னி ராசி கூட்டம் இப்போது துலா ராசியில் உள்ளது, துலா ராசி கூட்டம் இப்போழுது விருச்சிக ராசியில் உள்ளது என்பது போல.

ஆசிரியர், எஸ்.எஸ்.ஆர்.எஃப்: வேதிய ஜோதிடம் போன்ற மரபுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தன என்பதையும், அந்த காலத்திலேயே, வானியல் பற்றியும் மேலே கூறப்பட்ட உண்மைகளை பற்றியும் ஆழமான புரிதல் இருந்தது என்பதையும் நிரூபிக்க சான்றுகள் உள்ளன. அவர்கள் அதை அறிந்திருந்தனர் மற்றும் ஜோதிட கணிப்புக்கள் நட்சத்திர மண்டலங்களின் நகர்வுகளை கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தன. பகுதி 5.3 -ஐ பார்க்கவும்.

3.6 மகப்பேரின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் மற்ற காரணிகள்

ஜோதிடமானது சூரிய மண்டலத்தை சாராத பிற ஈர்ப்பு சக்திகளை புறக்கணித்து விடுகிறது. உதாரணத்திற்கு, புதிதாகப் பிறந்த குழந்தையின் மீதுள்ள மகப்பேறு மருத்துவரின் ஈர்ப்பு சக்தி, செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு சக்தியைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாக உள்ளது. (தகவல்: ஹ்யூக் ராஸ், Ph.D )

Editor SSRF: ஆசிரியர் எஸ்.எஸ்.ஆர்.எஃப்: ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (SSRF), அதன் வழிகாட்டுதலின் கீழ் ஆன்மீக பயிற்சி செய்யும் பல மருத்துவர்களை உள்ளடக்கியது. செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு சக்தியைக் காட்டிலும் மகப்பேற்றின் போது பயன்படுத்தப்படும் மருத்துவரின் சக்தி பல மடங்கு அதிகமாக இருப்பதாக அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அதே வேளையில், ஹ்யூக் ராஸ் கூறியுள்ள 6 மடங்கைக் காட்டிலும் மிக அதிகமாக இருப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர்.

 

Editor SSRF: ஆன்மீக கண்ணோட்டம்: ஜோதிடர்கள் முக்கியமாக கிரகங்களின் தாக்கத்தையே மிக குறிப்பிடத்தக்கதாக எடுத்து கொள்வர். ஆனால், ஜோதிடம் என்பது கிரகங்களின் ஸ்தூல அளவிலான தாகத்தைப் பற்றியதா அல்லது கிரகங்களின் நிலை நம் விதியை நிர்ணயிக்கும் வழிகாட்டியாக உள்ளதைப் பற்றியதா? பகுதி 5.2 -ஐ பார்க்கவும்.

3.7 ஜாதகம் தயாரிக்கப்படும்போது ஏன் கருத்தரிப்பு நேரத்திற்கு பதிலாக பிறந்த நேரம் கருதப்படுகிறது?

ஜாதகம், ஒருவரின் பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஏன் ஜாதகத்தில் கருத்தரிப்பு நேரத்திற்கு பதிலாக பிறந்த நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது ? ஒரு குழந்தையின் ஆளுமையின் பல அம்சங்கள் பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் இப்போது நம்புகின்றனர் – ஆகவே, பிறப்பதற்கு முன்னாலுள்ள காலத்தையும் ஜாதகத்தின் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Editor SSRF: ஆன்மீக கண்ணோட்டம்: கருத்தரிக்கும் நேரத்தை சரியாக அடையாளம் காண்பது கடினம். எனினும், பிறப்புக்கு முன்னர் ஜாதகம் வரையப்பட்டிருந்தால், அது மேலும் துல்லியமான பலன்களைக் கொண்டிருக்கும். கூடுதல் தகவலுக்கு பகுதி 5.5.5 -ஐ பார்க்கவும்.

3.8 புள்ளியியல் சான்றுகள்

ஜோதிடத்தின் துல்லியத்தை மதிப்பிடுவதற்கு பல ஆண்டுகளாக பல்வேறு புள்ளிவிவர ஆய்வுகள் நடத்தப்பட்டன. Astrology-and-science.com என்ற வலைத்தளம் நடத்திய ஒரு ஆய்வில் பல ஜாதகங்களும் அவற்றின் உரிமையாளர்களின் விவரங்களும் கலக்கப்பட்டன. ஜாதகங்களை அந்தந்த உரிமையாளர்களுடன் பொருத்த வேண்டிய பணி ஜோதிடர்களிடம் விடப்பட்டது.

‘ஜோதிட புத்தகங்களில் இது எப்பொழுதும் நடத்தப்படுகிறது’ என்று இவ்வலைத்தளத்தில் கூறினர். “எனவே வெற்றிகரமான முடிவுகளின் விகிதம் 100% -திற்கு அருகில் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இதுவரை மொத்தம் 54 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 742 ஜோதிடர்கள் மற்றும் 1407 ஜாதகங்களை பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டது. இவ்வளவு செய்த போதிலும், சராசரி வெற்றி விகிதம் தற்செயலாக  எதிர்பார்க்கப்படும் அளவே, 50% -மாக இருந்தது. அதாவது, ஒரு நாணயத்தை சுண்டிவிடுவதை காட்டிலும் சிறந்ததாக இல்லை.

ஆசிரியர் எஸ்.எஸ்.ஆர்.எஃப்: பொருளாதார நிலை, குழந்தைகளின் எண்ணிக்கை, ஆளுமை பண்புகள், திருமண அம்சங்கள், வணிகம், நோய்கள் போன்ற வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களில் ஒருவரின் ஜாதகத்தை துல்லியமாக கணக்கிடுவது மிகவும் கடினம் என்பதால், ஒரே ஒரு ஜோதிடர் இவ்வாறு செய்திருந்தாலும் அது பாராட்டத்தக்கது என வாதிடப்படுகிறது.

4. சில மதங்கள் ஜோதிடத்தை நிராகரிக்கின்றன

கிறிஸ்தவம் போன்ற மதங்கள் பின்வரும் காரணங்களுக்காக ஜோதிடத்தை முற்றிலும் நிராகரிக்கின்றன:

ஒரு கிறிஸ்துவ வலைத்தளம் absolutetruth.net, ஜோதிடம் என்பது பில்லிசூனியம் மற்றும் அமானுஷ்ய  விஷயங்களுக்கு சமமானதாக கருதப்படுவதால் பைபிள் அதை கடுமையாக கண்டனம் செய்கிறது எனக் கூறுகிறது.மேலும் இது கூறுவது,’நட்சத்திரங்களின் நிலை, மனிதர்களின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, முன்னறிவிப்பு செய்கிறது அல்லது அவர்களின் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது என்னும் ஜோதிடத்தின் அடிப்படை கோட்பாடு உண்மையானால், அதன் சூசனை என்னவாக இருக்கும் என்பதை கருதுங்கள்’:

> “மனிதர்கள் அவர்களின் நல்ல அல்லது தீய செயல்களுக்கு பொறுப்பாளர்களாக ஆக முடியாது. வானிலை அமைப்பால் ஒருவர் ஒரு விதமாக நடக்க உந்தப்படுகிறார் என்றால், ஒருவரின் நடத்தையை ‘சரியானது’ அல்லது ‘தவறானது’ என தீர்மானிப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை.”

Editor SSRF:ஆன்மீக கண்ணோட்டம்: ஆன்மீகத்தின்படி, இது முற்றிலும் சரியல்ல. “தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்ற நியமத்தின் பின்னால் உள்ள ஆன்மீக நியதியான கொடுக்கல்-வாங்கல் கணக்கு பற்றிய கட்டுரையைப் பார்க்கவும்.

> நம் தேர்வுகள் அர்த்தமற்றவை ஆகிவிடும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கங்களை மதிப்பிடுவதன் மூலம் எதிர்காலத்தை முன்வைக்க முடியும் என்றால், நாம் சொந்த முயற்சியில் தான் வாழ்கிறோம் என்பதே ஒரு மாயத் தோற்றமாகி விடும். அப்பொழுது நாம் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும். நாம் நம் ‘விதிக்குள்ளேயே’ ‘மாட்டிக் கொண்டு’ விடுவோம்.’

Editor SSRF: ஆன்மீக கண்ணோட்டம்: ஆன்மீகத்தின்படி, விதி என்பது உண்மையான விஷயம்தான், ஆனால் நாம் நமது விதியைச் சமாளிக்க முடியும், அதில் சிக்கிக் கொள்ள தேவையில்லை. பகுதி 5.1 மற்றும் விதியை எப்படி வெல்வது பற்றிய ஒரு கட்டுரையைப் பார்க்கவும்.

> ஜோதிடத்தின்படி, பிறப்பிலேயே நம் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட போக்கில் தீர்மானிக்கப்படுவதால், பைபிளின் முக்கிய கருத்தான வாழ்க்கை-மாற்றத்திற்கு இது முரண்பட்டதாக உள்ளது.

Editor SSRF: ஆன்மீக கண்ணோட்டம்: ஒரு நபரின் விதி எதிர்மறையானதாக இருந்தாலும் அவர் ஆன்மீகத்தில் முன்னேற முடியும். பகுதி 5.1 -ஐயும், ஆன்மீக பயிற்சி செய்வதால் ஒரு நபர் எவ்வாறு மேன்மை அடைய முடியும் என்னும “ஆன்மீக பயிற்சியின் நன்மைகள்” கட்டுரையையும் பார்க்கவும்.

> ஜோதிடம் மற்றும் ஜாதகம் போன்றவற்றை யார் நம்புகிறார்களோ, அவர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் மீது, சூட்சும அசுர சக்திகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். புனித பைபிளில் இது சம்பந்தமாக கடுமையான எச்சரிக்கைகள் உள்ளன.

ஆன்மீக கண்ணோட்டம்: ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) போன்ற அசுர சக்திகள் பயபக்தியுடையவர்களையும் பாதிக்கலாம்.  யாரையும் தவறாக வழிநடத்தி செல்ல அவைகளுக்கு ஜோதிடம் போன்ற ஒரு வாய்க்கால் தேவையில்லை. இதில் அடிப்படைத் தத்துவம் என்னவெனில், உயர்ந்த ஆன்மீக நிலை உள்ளவர்களுக்கும், ஆன்மீக பயிற்சி செய்பவர்களுக்கும் ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை)  தாக்குதலிலிருந்து அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. தற்போதைய யுகத்தில் எல்லா மதங்களையும் சார்ந்த பெரும்பாலான மக்கள், 20% ஆன்மீக நிலையில்தான் உள்ளனர். அதனால், அவர்களிடம் ஆன்மீக சக்தி இருப்பதில்லை அல்லது குறைவாக இருப்பதால் ஆவிகளிடமிருந்து (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) தற்காத்துக் கொள்ள முடிவதில்லை. ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) பற்றிய எங்கள் பகுதியைப் பார்க்கவும்.

5. ஜோதிடத்தின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை பற்றிய ஒரு ஆன்மீக கண்ணோட்டம்

நாங்கள் நடத்திய ஆன்மீக ஆராய்ச்சியில், ஜோதிடத்தைப் பற்றியும் அதன் துல்லியத்தைப் பற்றியும் சில குறிப்புகள் எங்களுக்கு கிடைத்தன; அவை கீழ் வருமாறு.

5.1 நம் வாழ்வில் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உண்மையில் நமக்கு எவ்வளவு உள்ளது?

ஆன்மீகத்தின்படி, தற்போதைய யுகத்தில் சராசரியாக, நம் வாழ்வில் 65% விதியாலும் மற்றும் 35% தன்னிச்சையான செயல்களாலும் (தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்) ஆளப்படுகிறது.  வாழ்வின் சூழ்நிலைகள் மீது நமக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாதிருக்கும் நம் வாழ்வின் பகுதியே விதி ஆகும். தன்னிச்சையான செயல் என்பது வாழ்வின் சூழ்நிலைகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியை குறிக்கிறது.

ஜோதிடத்தின் துல்லியம், ஒரு ஆன்மீக கண்ணோட்டம்

ஜோதிடம் மூலமாக ஒருவரின் விதியில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதையும் அவருடைய அடிப்படை இயல்பின்படி தன்னிச்சையான செயலை எவ்வாறு உபயோகிக்க போகிறார் என்பதையும் ஓரளவே அறிய முடியும். சாதாரணமாக, ஒருவருக்கு தன் விதியில் உள்ளது தெரிந்தாலும் அவரால் அதிலிருந்து தப்ப இயலாது. எனினும், விதி என்பது இயல்பாகவே ஒரு ஆன்மீக காரணி என்பதால், ஆன்மீக பயிற்சியை மேற்கொள்வதால் மற்றும் குருவின் அருளால் மட்டுமே அதை வெற்றி கொள்ள இயலும். (குரு என்பவர் 70% ஆன்மீக நிலைக்கு மேற்பட்டவர்)

விதியின் தீவிரத்தை அறிவதால் நமக்கு என்ன பயன்?

நம் விதியின் தீவிரத்தை அறிந்து கொள்வதன் மூலம், அதற்கேற்ற அளவு ஆன்மீக பயிற்சி செய்து, அதனை வெல்ல முடியும் அல்லது அதிலிருந்து பாதுகாப்பு பெற முடியும். கடுமையான விதியானால், குறைந்தபட்சம் நாம் முன்னறிவிப்புடன் இருக்க முடியும், மனோரீதியாக தயார் நிலையில் இருக்க முடியும். விதியின் வகைகள் மற்றும் அதனை வெற்றி கொள்ளும் வழிகள் பற்றித் தெரிந்து கொள்ள கீழே உள்ள வரைபடத்தைப் பார்க்கவும்.

விதியின் வகைகள்

மிதமான மத்யம தீவிர
உதாரணங்கள் சிறு வியாதிகள், ஒரு திருமணம் ஏற்பாடு செய்ய தேவையான முயற்சிகள் சராசரியை விட அதிகம் பொருள் பிரச்சினைகள், நிதி இழப்புகள், குழந்தைப்பேறு இல்லாமை பெரும் விபத்துக்கள் மற்றும் அகால மரணம், மிக அதிக முயற்சிகள் எடுத்தும் ஒரு திருமணம் ஏற்பாடு செய்ய முடியாதது
எவ்வாறு வெற்றி கொள்வது மத்யம ஆன்மீக பயிற்சி தீவிர ஆன்மீக பயிற்சி ஆன்மீக பயிற்சியால் மாற்ற முடியாது. குருவின் அருள் மட்டுமே அதை மாற்ற முடியும்

தயவு செய்து கவனிக்கவும்:

தீவிர ஆன்மீக பயிற்சி என்பது, அளவின் அடிப்படையில், ஒரு நாளில் 12-14 மணி நேரத்தை ஆன்மீக பயிற்சிக்காக ஒதுக்குவதாகும். தரத்தின் அடிப்படையில், இது  ஒருவர் இறைவனை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கில், மிகுந்த ஏக்கத்துடன், தன் அன்றாட வேலைகளை ஆழ்ந்த பக்தியுடன் இறைவனுக்கு செய்யும் சேவையாக செய்வதாகும்.

மத்யம ஆன்மீக பயிற்சி என்பது, அளவின் அடிப்படையில், ஒரு நாளில் 4-5 மணி நேரத்தை ஆன்மீக பயிற்சிக்காக ஒதுக்குவதாகும். தரத்தின் அடிப்படையில், இது ஒருவர் அன்றாட வேலைகளில் பெரும்பாலானவையை இறைவனுக்கு செய்யும் சேவையாக செய்வதாகும்.

விதி, தன்னிச்சையான செயல் மற்றும் கர்மவிதி பற்றிய கட்டுரைகளை தயவு செய்து பார்க்கவும்.

5.2 கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மனித நடத்தைகளை பாதிக்கின்றன, இருப்பினும் அவை குறியீடுகளாக செயல்படுகின்றன.

ஆன்மீகத்தின்படி:

  • ஒரு மனிதனின் வாழ்வு அல்லது பூமியில் நிகழும் சம்பவங்கள், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அல்லது அவற்றின் நிலைகளால்  மட்டுமே பாதிக்கப்படுவதில்லை. நாம் ஸ்தூல ரீதியான தாக்கங்களை எடுத்தோமானால், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களைத் தவிர நம்முடைய வாழ்க்கையை பாதிக்கக்கூடிய வேறு பல விஷயங்களும் உள்ளன.
  • இருப்பினும்,  ஆன்மீகத்தின்படி கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மனித வாழ்க்கையின் மீது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது  ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உதாரணமாக, மனித வாழ்வில் பௌர்ணமி மற்றும் அமாவாசையின் விளைவு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் ஒரு நபரின் வாழ்க்கையில், குறியீடுகளாக அல்லது ஒரு வழிகாட்டியாக செயல்படுகின்றன.

ஒரு நபரின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து முக்கிய தாக்கங்களுக்கும் பகுதி 5.4  -ஐ காண்க.

5.3 ஜோதிடம் ஒரு அறிவியல்

நவீன விஞ்ஞானத்தைப் போலவே ஜோதிடம் என்பதும் அனைத்தையும் உள்ளடக்கிய ஆன்மீகத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு காரணம், நவீன விஞ்ஞானத்தைப் போலவே கூர்ந்து கவனித்தல், அனுமானம் செய்தல் மற்றும் முடிவு செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் ஜோதிடம் உறுதிபடுத்தப்பட்டு, மறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், ஜோதிடர்கள் உயர்ந்த ஆன்மீக நிலையில் இருந்தால் மட்டுமே, அவர்களின் உள்ளுணர்வு ஜோதிடத்திற்கு பயன்படும்.

ஜோதிடத்தின் வேர்கள், பண்டைய இந்திய வேத நூல்களில் உள்ளன. நவீன விஞ்ஞானத்தின் கவனத்திற்கு சமீபத்தில்தான் வந்துள்ள நமது பிரபஞ்சத்தைப் பற்றிய பல உண்மைகளை பண்டைய இந்தியாவின் ரிஷி முனிவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர்.அப்படிப்பட்ட சில உண்மைகள்:

  • நமது சூரியன், மற்ற சூரியன்களைவிட சிறியது என்பதை 7000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவின் பண்டைய முனிவர்கள் அறிந்திருந்தனர்.
  • நவீன விஞ்ஞானத்தால் எடுக்கப்பட்ட நெபுலே  புகைப்படத்தின் விளக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
  • வேகா என்ற நட்சத்திரம் (சமஸ்கிருதத்தில் அபிஜீத் என்று அழைக்கப்படுவது) வானத்திலிருந்து கி.மு.12000 -ம் ஆண்டு தவறி விழுந்தது என்ற விஷயத்தை கி.மு. 5561 -ம் ஆண்டிலேயே வியாச முனிவர் எடுத்துக் கூறியுள்ளார். இது இப்பொழுதுதான் நவீன வானியல் அறிஞர்களின் கவனத்திற்கு வந்துள்ளது. (தகவல்: டாக்டர் பி.வி.வர்தக் எழுதிய ‘Vedic science and Vedic time calculations’ என்ற புத்தகம்)
  • வேதிய வானியலில், கலிலியோ கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, பூமி ஒரு நகரும் கிரகமாக இருந்தாலும் ஓரிடத்தில் இருப்பதாக தோற்றம் அளிக்கிறது என்ற வேதிய தீர்க்கதரிசிகளின் கூற்று வருகிறது.(தகவல்: டாக்டர் ஆர்.என்.அரளிகட்டியின் ‘The Storehouse of Wisdom’) 
  • இந்தியாவின் ரிஷிகள் மனித உயிரினத்திற்கும், அண்டவெளியில் மற்றும் பூமிக்கு அடியில் உள்ள செயல்முறைகளுக்கும் இடையில்  மிக சூட்சும மற்றும் ஆழமான மனோ-உயிரியல் ரீதியான இணைப்புகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த பண்டைய காலங்களில் இருந்தவர்கள், முக்கிய நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் காரணிகள் மற்றும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள தொடர்பின் தன்மை, குறிப்பாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் பாதிப்பு, அண்டவெளியிலிருந்து மற்றும் பூமிக்கு அடியிலிருந்து வெளிப்படும் பல்வேறு கதிர்வீச்சின் பாதிப்பு  ஆகியவற்றை எந்தவொரு ஆராய்ச்சியோ அல்லது கருவிகளோ இல்லாமல்  எவ்வாறு கண்டறிந்தனர? இவை அனைத்தும் நோயை கண்டறியவும் மற்றும் சிகிச்சை அளிக்கவும் கருத்தில் கொள்ளப்பட்டன! நம்முடைய வியப்பையும், நன்றியுணர்வையும், ஆய்வு மேற்கொள்ளும் ஊக்கத்தையும் வழங்க வல்ல இந்த கலாச்சாரம் ஒரு உன்னத கலாச்சாரமன்றோ? (தகவல் : பேராசிரியர் அலெக்சாண்டர் ச்பிர்கின், நன்கு அறியப்பட்ட உளவியலாளர், Indastro.com -ல் மேற்கோள் காட்டியுள்ளபடி)

ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியால் உணர முடியாத சூட்சும உலகத்தை ஜோதிடத்தின் மூலம் ஓரளவு உணரலாம் என்பதால் ஜோதிடம் என்பது ஒரு தனித்துவம் வாய்ந்த அறிவியலாகும். உதாரணமாக, நம் முன்னோர்களால் நாம் பாதிக்கப்பட்டிருந்தால், அதை கிரகங்கள்மற்றும் நட்சத்திரங்களின் நிலையை அடிப்படையாகக் கொண்டு ஜோதிடத்தால் கூற இயலும்.

மறுபுறம், நவீன விஞ்ஞானம், ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் ஊடாக பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. எனினும், அறியப்பட்ட பிரபஞ்சத்துடன் ஒப்பிடும்போது சூட்சும அல்லது ஆன்மீக பரிமாணத்தின் அளவு 1 : முடிவற்றது ஆகும். நவீன விஞ்ஞான கருவிகளைக் கொண்டு நவீன விஞ்ஞானம், ஆன்மீக பரிமாணத்தில் மூல காரணத்தை கொண்டிருக்கும் பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களைக் கண்டறிய முடியாது. உதாரணமாக, ஒரு நபர் மூதாதையர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால், நவீன விஞ்ஞானத்தால் இந்த அறிகுறிகளை கண்டறியவோ அல்லது அதற்கு சிகிச்சையளிக்கவோ முடியாது. தேர்ச்சிபெற்ற ஜோதிடர்கள் (அதாவது, வேதிய ஜோதிடர்கள், இன்றைய ஜோதிடர்களின் முன்னோர்கள்) தங்கள் புத்தியை உபயோகித்து,  நம் முன்னோர்கள் புவர்லோகத்தில் சிக்கியிருக்கிறார்கள் மற்றும் சந்ததியினரின் உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது என்று, சூட்சும பரிமாணத்தை ஓரளவு உணர்கின்றனர் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்.

ஜோதிடம் ஒரு அறிவியலா இல்லையா என்பது பற்றிய விவாதம் மற்றும் அதற்கு எதிராக உருவாக்கப்பட்ட காரணங்கள் அல்லது வாதங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, பின்வரும் கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும். ஜோதிடத்தை நவீன விஞ்ஞானம் அநியாயமாக மதிப்பிடுவது போல் காணப்படுகிறது. எந்த ஒரு அறிவியலும், அது அறிவியலாய் கருதப்பட, 100% சரியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உதாரணமாக, ஒரு புவியியல் வல்லுநர் (பில்லியன் கணக்கான டாலர்கள் செலவு செய்தாலும்) அடுத்த நிலநடுக்கம் எங்கு ஏற்படும் என்று துல்லியமாக கூறமுடியவில்லை என்றால், புவியியல் ஒரு அறிவியல் அல்ல என்று நாம் கூறுவதில்லை. ஒரு மருத்துவர் தவறாக நோய் கண்டறிதால், நாம் முழு மருத்துவ துறையையே இழிவுபடுத்துவதில்லை. அவ்வாறு செய்வது, குழந்தையை குளிப்பாட்டிய தண்ணீருடன் சேர்த்து தூக்கி எறிவதை போல இருக்கும். நியாயப்படி, ஜோதிடத்தை எடைபோடுவதற்கு நாம் உபயோகிக்கும் அதே கடுமையான தீர்ப்பு முறையை நவீன விஞ்ஞானத்திற்கும் உபயோகிக்க வேண்டும்.

5.4 ஜோதிடத்தின் துல்லியம்

முன்பு குறிப்பிட்டபடி, ஜோதிடம் பொதுவாக நான்கு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஜோதிடத்தின் இந்த நான்கு பயன்பாடுகளில் சராசரியாக பெறக்கூடிய அதிகபட்ச துல்லியம் என்ன? இது சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி பின்வரும் முடிவுகளை சுட்டிக் காட்டியது:

பயன்பாடு

பயன்பாட்டின் பொருள்

அதிகபட்ச துல்லியம்2

(ஆன்மீக ஆராய்ச்சி மூலம்)

கணிப்பு

என்ன நடக்க போகிறது என்பதை தெரிந்து கொள்வது

30%

கண்டறிதல்

வாழ்க்கையின் எந்தவொரு அம்சத்தையும் பாதிக்கும் கஷ்டத்தின் மூல காரணத்தை புரிந்து கொள்ள உதவும் கருவியாக செயல்படுவது

27%

அடிப்படை இயல்பு மற்றும் பொருத்தங்கள்

ஒருவரின் அடிப்படை இயல்பை புரிந்து கொள்ளுதல் மற்றும் தொழில் பொருத்தம் அல்லது வாழ்க்கைத்துணையிடம் ராசி பொருத்தம் அல்லது ஜாதகப் பொருத்தம் உள்ளதா என புரிந்து கொள்ளுதல்.

27%

முடிவெடுத்தல்

ஒரு திட்டமிட்ட நிகழ்விற்கான பரிந்துரைக்கப்படும் நல்ல நேரம் அல்லது எப்போது திருமணம் செய்வது போன்ற ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு பதில் அளிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

5%

2இந்த துல்லியம் உடல்ரீதியான, மனோரீதியான மற்றும் ஆன்மீக ரீதியான பரிமாணங்களில் கஷ்டத்தின் மூல காரணத்தை அறிந்து கொள்ளும் திறனை அடிப்படையாகக் கொண்டது.

  • ஜோதிடம் கணிப்பதன் துல்லியத்தை பாதிக்கும் காரணிகளை விளக்கும் பகுதி 5.5. நம் வாழ்வில் பிரச்சினைகள்/நிகழ்வுகளின் காரணங்கள் பன்மடங்கு, ஜோதிடத்தால் அவை அனைத்தையும் உணர முடியாது. அவற்றில்  விதியோடு சேர்ந்து, கொடுக்கல்-வாங்கல் கணக்கு, ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை), நல்ல சக்திகள், தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை(தன்னிச்சையான செயல்) எவ்வாறு பயன்படுத்துகிறோம், உடல் மற்றும் சூழலில் உள்ள ஆன்மீக சக்திகள் போன்றவையும் அடங்கும்.
  • மேலே உள்ள புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, ஜோதிடத்தை ஒரு அறிவியல் அல்ல என நிராகரிக்க நம்மில் சிலர் ஆசைப்படலாம்.
  • உண்மையில், வேறு துறைகளுடன் ஜோதிடத்தை ஒப்பிடும் போது, இந்த சதவிகிதங்கள் அதிகமானது ஆகும். கீழே மேற்கோள் காட்டப்பட்டுள்ள புள்ளிவிவரங்களுடன், பில்லியன் கணக்கான டாலர்கள் நிதியுதவி உடைய மற்றும் மிக நுட்பமான உபகரணங்களைப் பயன்படுத்தும் நவீன விஞ்ஞானங்களுக்கு எதிராக ஒரு ஜோதிடரால் ஒரு துண்டு காகிதத்தை (ஜாதகத்தை) வைத்து இந்த சதவிகிதத்தை அடைய முடியும் என்ற உண்மையை கருத்தில் கொள்ளுங்கள்.

நவீன விஞ்ஞானத்தின் கீழ் வரும் பல்வேறு துறைகளின் வெற்றி விகிதத்தின் சில உதாரணங்கள்:

  1. புவியியல்: பேரழிவை ஏற்படுத்தக் கூடிய பெரிய அளவு நிலநடுக்கங்களின் இடத்தையும் நேரத்தையும் கணிப்பதில் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது. நிலநடுக்கங்கள் எங்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி நிறைய தெரிந்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அது எந்த நாளில் அல்லது மாதத்தில் நடக்கும் என்பதை கணிப்பதற்கான நம்பகமான முறை தற்போது இல்லை. (தகவல்: Department of Earth and Space Sciences – University of Washington)
  2. உளவியல் சிகிச்சை: அமெரிக்காவின் மது அருந்துதல் மற்றும் மதுப்பழக்கம் பற்றிய தேசிய நிறுவனம் (The National Institute on Alcohol Abuse and Alcoholism) ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு 1,700 நோயாளிகளை ஆராய்ந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று, கண்காணிப்பில் இருந்த நோயாளிகளில் 44 சதவிகிதத்தினர் மட்டுமே மூன்று மாத காலத்திற்கு மது அருந்தாமல் இருந்தனர்; வெளிநோயாளிகளாக இருந்து சிகிச்சை பெற்றவரில் 26 சதவிகிதத்தினர் மட்டுமே மூன்று மாத காலத்திற்கு மது அருந்தாமல் இருந்தனர். (தகவல்: Pulitzer.org )
  3. மருத்துவம்: நுரையீரல் புற்றுநோய்க்கான உயிர் பிழைப்பு விகிதம் 10% -திற்கும் குறைவானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. (தகவல்: cancerresearchuk.org) 

இந்தத் துறைகளில் நாம் குறைவான வெற்றி விகிதங்களை கொண்டிருப்பதால், இந்த அறிவியல் அல்லது துறைகளை நாம் புறக்கணிக்கிறோமா?

5.5 ஜோதிடத்தின் துல்லியத்தை பாதிக்கும் காரணிகள்

5.5.1 ஜோதிடத்தின் பாரம்பரியத்தைப் பொருத்தது

ஜோதிடத்தில் பல்வேறு மரபுகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றன. பின்வரும் அட்டவணை, ஆன்மீக ஆராய்ச்சி மூலம் பெறப்பட்ட, மிகவும் குறிப்பிடத்தக்க மரபுகள் மூலம் அடையக்கூடிய துல்லியத்தின் ஒப்பீட்டு விளக்கப்படம் ஆகும்.

ஜோதிடத்தின் துல்லியம், ஒரு ஆன்மீக கண்ணோட்டம்

குறிப்பு: வேதிய ஜோதிடத்தில் 30 சதவிகித துல்லியத்தை அடையக்கூடிய ஜோதிடரின் அதே திறமையின் அடிப்படையில் துல்லியம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

5.5.2 ஜோதிடரின் ஆன்மீக நிலையை அடிப்படையாகக் கொண்டது

ஒரு ஜோதிடரின் துல்லியம், அவரது ஆன்மீக நிலையை பொருத்து மாறுபடும்.

ஜோதிடரின் ஆன்மீக நிலை

துல்லியம்

20% 3 (அதாவது, ஒரு சராசரி நபர், எந்த ஆன்மீக பயிற்சியும் இல்லை)

27%

30%

31%

40% 4

34%

50%

38%

60%

42%

70% -க்கு அப்பால்5

ஜோதிடம் தேவையில்லை

அடிக்குறிப்புகள் (மேலே உள்ள அட்டவணையில் உள்ள எண்களின் அடிப்படையில்):

3தற்போதைய யுகத்தில் உள்ள பெரும்பாலோர் எந்த ஆன்மீக பயிற்சியும் செய்வதில்லை. இதன் விளைவாக, கலவரம் மிகுந்த கலியுகத்தில் தற்போதைய சராசரியான ஆன்மீக நிலை 20% ஆகும்.

4 தோராயமாக, தற்போதைய யுகத்தில், ஒவ்வொரு 100 பேரில் கிட்டத்தட்ட 4 பேர் மட்டுமே, 40%-49% ஆன்மீக நிலைக்கு இடையில் உள்ளனர்.

5 2016 -ஆம் ஆண்டு வரை, 70% மற்றும் 100% ஆன்மீக நிலைக்கு இடையில் சுமார் 1000 மகான்கள் இருந்தனர். எனினும்,  200 -க்கும் குறைவான மகான்களே தர்ம பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

5.5.3 ஆன்மீக பயிற்சியை மேற்கொண்ட நபரை அடிப்படையாகக் கொண்டது

விதியை வெல்லவோ அல்லது அதிலிருந்து பாதுகாப்பு பெறவோ ஒரே வழி, ஆன்மீக பயிற்சி செய்வதுதான். ஏனென்றால், ஆன்மீக பிரச்சினையாக இருக்கும் விதியை ஒரு ஆன்மீக நிவாரணத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். இருப்பினும், ஆன்மீக மூல காரணத்தை கொண்ட கஷ்டங்களை தூர விலக்க செய்யப்படும் ஆன்மீக பயிற்சி மற்றும் ஆன்மீக சடங்குகளின் தாக்கம் இந்த ஜாதகத்தில் பிரதிபலிக்கப் படவில்லை. எனவே, ஒருவரைப் பற்றிய ஜோதிட கணிப்பு அந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட ஆன்மீக பயிற்சியைப் பிரதிபலிப்பதில்லை.

உதாரணமாக, பிறப்பின் போது ஒரு நபரின் ஜாதகத்தில் ஒரு  ஜோதிடர் மூதாதையரின் பிரச்சனையை கண்டறிந்தால், சில சடங்குகள் செய்த பின் அந்த பிரச்சனை தீர்ந்து போகலாம். எனினும், அடுத்த ஜோதிடரும் ஜாதகத்தை முன் போலவே கணிப்பார். இந்த கண்ணோட்டத்தில், கைரேகைகளில் மாற்றங்கள் பிரதிபலிப்பதால், ஜோதிடத்தை  விட கைரேகை ஜோதிடம் உயர்ந்ததாக கருதப்படுகிறது.  ஒரு சராசரி நபர்  ஆன்மீக பயிற்சியை செய்யாததால், ஜோதிடத்தின் இந்த உள்ளார்ந்த குறைபாடு அவரை பாதிப்பதில்லை.

5.5.4 ஜோதிடரிடம் கேட்கப்படும் கேள்வியை அடிப்படையாகக் கொண்டது

ஜோதிடத்தின் துல்லியம்,  ஜோதிடரிடம் கேட்கப்படும் கேள்வியையும் பொருத்தது.

உதாரணமாக, ஒருவர் ஒரு ஜோதிடரிடம் ஒரு வகை ஸ்தாபனத்திலோ அல்லது மற்றொன்றிலோ முதலீடு செய்யலாமா என்று கேட்கலாம். மற்றொருவர் ‘அ’ -வை திருமணம் செய்து கொள்வதா அல்லது ‘ஆ’ -வை திருமணம் செய்வதா என்று கேட்கலாம்.

முதலில் முதலீடு செய்யலாமா அல்லது வேண்டாமா என்றும், திருமணம் செய்யலாமா அல்லது வேண்டாமா என்றும் அவர் கேள்வியை கேட்டிருந்தால், கணிப்பு மேலும் துல்லியமாக இருந்திருக்கும்.

பின்வரும் வரிசைமுறைப்படி கேள்விகளைக் கேட்டால், மேலும் துல்லியமான பதில்களை பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.

கேள்வி 1: முதலீடு செய்யலாமா?

கேள்வி 2: செய்யலாம் என்றால், எதில்?

கேள்வி 3: நான் எப்போது முதலீடு செய்ய வேண்டும்?

– அல்லது –

கேள்வி 1: நான் திருமணம் செய்து கொள்ளலாமா?

கேள்வி 2: செய்யலாம் என்றால், யாருடன்?

கேள்வி 3:  சாதகமான நேரம் எப்போது?

5.5.5 ஒருவர் பிறந்த நேரத்தின்படி

கருத்தரித்த நேரத்தின் அடிப்படையில் ஜாதகம் கணிக்கப்பட்டால், அதிக துல்லியமாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் பின்னோக்கிப் போகும்போது துல்லியம் அதிகரிப்பதற்கான காரணங்கள்:

  • இதிலுள்ள தத்துவம் , வெளி உலகக் கூறுகளின் தாக்கம் அதிகரிக்கும் போது துல்லியம் குறைகிறது என்பதாகும்.
  • கருத்தரிக்கும் சமயத்தில், ​​கருவின் மீது, தாய் மற்றும் அவளது சுற்றுச்சூழலின் பாதிப்பு குறைவாகவே உள்ளது. காலப்போக்கில், இது அதிகரிக்கும் போது, துல்லியம் குறைகிறது.

இருப்பினும், தாயாராக போகிறவரால், கருத்தரிப்பின் சரியான நேரத்தை முன்கூட்டியே கணக்கிட முடியுமா? நம் உடலில் பல லட்சக்கணக்கான உயிரணுக்கள் உள்ளன, இதில் ஒரு உயிரணுவில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதைபுரிந்து கொள்வது மிகவும் கடினமாகும். எந்த பெண்ணால் இதைப் புரிந்து கொள்ள முடியும்? ஏற்கனவே 90% மற்றும் அதற்கு மேற்பட்ட ஆன்மீக நிலையை அடைந்த ஒருவரால் மட்டுமே, அதுவும்  அவர் தெரிந்து கொள்ள விரும்பினால், தெரிந்து கொள்ள முடியும். இருப்பினும், பொதுவாக இந்த உயர் ஆன்மீக நிலையில் இருப்பவர்  யாரும் கருத்தரிப்பதில்லை. பூர்வ காலங்களில், உயர் ஆன்மீக நிலையில் இருந்த ரிஷிகளின் மனைவிகள், தங்களின் கர்ப்பம் தரிக்கும் சரியான நேரத்தை உணர்ந்திருந்தனர்.

90% மற்றும் அதற்கு மேற்பட்ட ஆன்மீக நிலையில் உள்ள மகான்களால், அதுவும் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் மட்டுமே, 100% துல்லியத்தை அடைய முடியும். பிறக்கப்போகும் ஜீவன் 80% -திற்கு மேலான ஆன்மீக நிலையில் இருந்து, குழந்தையின் பிறப்பைப் பற்றிய உண்மைகள் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப முன்னரே அறியப்பட வேண்டும் என்றால் ஒழிய, மகான்கள் இதனை தெரிந்து கொள்வதற்காக அவர்களின் ஆன்மீக திறனை உபயோகிக்க மாட்டார்கள். இத்தகைய பிறப்பு மனிதகுலத்தின் ஆன்மீக நலனுக்காக நடப்பதாலும், அதிகபட்ச அளவு முழுமையான சத்தியம் (‘ஸத்’) இதில் இருப்பதாலும், பெறப்படும் பதில்களும் மிகவும் துல்லியமாக இருக்கும். சாதாரண பிறப்பில், மாயையின் (‘அஸத்’  – சத்தியமில்லாதது) பங்கு அதிகமாக இருப்பதால், துல்லியம் குறைகிறது.

6. முடிவுரை

  • ஒரு ஜாதகத்தின் துல்லியம் ஒரு ஜோதிடரின் பொருள் கொள்ளும் திறனை நேரடியாக சார்ந்துள்ளது.
  • தற்போதைய ஜோதிடரின் (அதிகபட்சம் 30% துல்லியம் வரை கணிப்பவர்) பொருள் கொள்ளும் திறன் 1 என வைத்துக் கொண்டால், 100% துல்லியமான பதிலைப் பெற, தற்போதைய பொருள் கொள்ளும் திறனைப் போல் 1,000 மடங்கு அதிக அளவு பொருள் கொள்ளும் திறன் வேண்டும்.
  • பொருள் கொள்ளும் திறன் மற்றும் உள்ளுணர்வை ஆன்மீக பயிற்சியால் மட்டுமே அதிகரிக்க முடியும்.
  • தற்போதைய யுகத்தில், நம் வாழ்வில் 65% விதிவசப்பட்டது. 35% நம்மிடமுள்ள நம் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை ஆன்மீக பயிற்சி செய்ய பயன்படுத்தினால், நம்மால் விதியை வெல்லவோ அல்லது அதிலிருந்து பாதுகாப்பு பெறவோ முடியும். ஆன்மீக பயிற்சியே பாதகமான விதியை எதிர்ப்பதற்கான ஒரே வழி.