1. ஒருவரின் ஆளுமைக் குறைகள் அவரின் ஆன்மீக பயிற்சியின் மீது ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கம்

புராதன ஏடுகளில் ஒரு வாசகம் உண்டு :

ஒருவரின் மனம் பந்தப்படுவதற்கோ அல்லது பிறப்பு இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து, இன்ப துன்பத்திலிருந்து விடுபடுவதற்கோ அவரின் மனமே காரணமாக அமைகிறது.

முந்தைய கட்டுரைகளில் பார்த்தது போல ஒருவரின் துக்கத்திற்கு காரணமாக இருப்பது அவரின் ஆளுமைக் குறைகளே. அதுபோல் அவரின் மகிழ்ச்சிக்கு, திருப்திக்கு காரணமாக இருப்பது அவரிடம் உள்ள குணங்கள் ஆகும். ஒருவரின் ஆளுமைக் குறைகளும் குணங்களும் சமூகத்திலும் தாக்கம் ஏற்படுத்தும். குறிப்பாக அவர் உயர் அந்தஸ்தில் இருந்தால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு. இணையதளங்களும் சமூக ஊடகங்களும் பிரபலமாயுள்ள இன்றைய காலத்தில் ஒருவர் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆளுமைக் குறைகள், தனக்கும் மற்றவருக்கும் துக்கத்தையே தரும். அத்துடன் வாழ்க்கை கண்ணோட்டத்தையே சிதைக்கும். துக்கத்தோடு கூட ஆளுமை குறைகளால் ஆன்மீக பரிணாமங்களும் ஏற்படுகின்றன. ஆன்மீக பயிற்சி செய்யும் ஒரு ஸாதகரின் வாழ்வில் அவரின் பல ஆளுமை குறைகளால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

  1. மனம் ஒருமுகப்படாதிருத்தல் : SSRF வலைதளம், ஆன்மீக பயிற்சியில் 8 படிகள் கொண்ட குருக்ருபாயோகத்தை பரிந்துரைக்கிறது. இந்த ஆன்மீக பயிற்சியின் அடித்தளமாக நாமஜபம் விளங்கினாலும் ஒருவரின் ஆழ்மனம் முழுவதும் ஆளுமை குறைகளால் நிறைந்திருந்தால் அதில் நாமஜபத்திற்கான மையத்தை (ஒரு பக்தி மையம்) உருவாக்குவது கடினமாகிறது. தன்னிடமுள்ள பல்வேறு ஆளுமை குறைகளால் ஒரு ஸாதகரால் ஒருமுகப்பட்ட மனத்துடன் நாமஜபம் செய்ய முடிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆளுமை குறைகளால் எந்த வித ஆன்மீக பயிற்சியையும் செய்ய முடிவதில்லை.
  2. கடவுளோடு ஒன்றமுடியாமல் இருத்தல் : ஆன்மீக பயிற்சியின் இறுதி இலக்கு, கடவுளோடு இணைவது ஆகும். ஆனால் எப்படி ஒரு துளி எண்ணெய் தண்ணீருடன் கலக்காதோ அதேபோல் நம்மிடம் பல ஆளுமை குறைகள் இருக்கும் பட்சத்தில், முழுமையான, அப்பழுக்கற்ற, சர்வ கல்யாண குணங்களின் இருப்பிடமான பரமாத்மாவுடன் இணைவது இயலாத காரியம்.
  3. ஆன்மீக பயிற்சியின் மூலம் திருப்தி ஏற்படாதிருத்தல் : பல ஆளுமை குறைகளும் அதிக அஹம்பாவமும் கொண்ட ஒரு ஸாதகருக்கு ஆன்மீக பயிற்சியின் மூலம் என்றும் மன திருப்தி ஏற்படாது. ஏனென்றால் அவரின் எதிர்மறை சுபாவங்கள் இதற்கு பெரும் தடைக்கல்லாக விளங்கும்.
  4. தீய சக்திகளின் கட்டுப்பாட்டில் இருத்தல் : இது போன்ற ஸாதகர் வெகு சுலபமாக தீய சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள் வரும் வாய்ப்பு உள்ளது. அவரிடமுள்ள பல்வேறு ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தின் மூலம் தீய சக்திகளுக்கு அவரை பீடிப்பது வெகு சுலபமாகிறது.
  5. ஆன்மீக பயிற்சிக்கு தேவையான திறன் குறைதல் : ஆளுமை குறைகளாலும் அஹம்பாவத்தாலும் ஒரு ஸாதகர் இழைக்கும் தவறுகளால், ஆன்மீக பயிற்சியின் மூலம் அவருக்கு கிடைக்கும் சக்தி குறைந்து அவரின் செயல்திறனும் ஆற்றலும் கூட குறைகிறது.

2. ஆன்மீக பயிற்சியில் ஆளுமை குறைகளை களைவதன் முக்கியத்துவம்

மேற்கூறிய எல்லா காரணங்களால், பல ஆளுமை குறைகள் உடைய ஸாதகர்கள் ஆன்மீக முன்னேற்றம் அடையாமல் பிறப்பு இறப்பு சக்கர சுழற்சியில் மாட்டிக் கொள்கின்றனர்.

இக்காரணத்தால் பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்கள், கீழ்க்கண்ட வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்

‘ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதற்கு, ஆளுமை குறைகளையும் அஹம்பாவத்தையும் களைவது மிகவும் அவசியம். இது கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம், ஹடயோகம், குண்டலினியோகம் போன்று எந்த ஆன்மீக பாதையை அனுசரித்தாலும் பொருந்தும். முந்தைய யுகங்களான சத்யயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம் ஆகியவற்றில் இருந்தவர்களிடம் மிகக்குறைவான ஆளுமை குறைகளும் அஹம்பாவமும் இருந்தன. தற்போதைய கலியுகத்தில் அநேகம் பேர் தங்களின் தீவிர ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தால் ஆன்மீகத்தில் முன்னேறவில்லை. அதனால், ஒரு ஸாதகர் எந்த ஆன்மீக பாதையை பின்பற்றினாலும் அவரிடமுள்ள ஆளுமை குறைகளையும் அஹம்பாவத்தையும் களைவதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.’

– (பராத்பர குரு) டாக்டர் ஜயந்த் ஆடவலே (28 மே 2015)

குருக்ருபாயோகத்தின்படியான ஆன்மீக பயிற்சியின் 8 படிகள் :

  1. ஆளுமை குறைகளை களைதல்
  2. சத்சேவை : சத்யத்திற்கான சேவை
  3. நாமஜபம் : இறைவனின் நாமத்தை ஜபிப்பது
  4. சத்சங்கம் : சத்யத்தின் சங்கத்தில் இருப்பது
  5. தியாகம் : இறைவனை அடைய செய்யப்படும் தியாகம்
  6. ப்ரீதி : எல்லோரிடமும் வைக்கும் ஆன்மீக அன்பு
  7. பாவஜாக்ருதி : ஆன்மீக உணர்வை விழிப்படைய செய்தல்
  8. அஹம்பாவத்தை களைதல்

இந்நாள் வரை, ஆன்மீக பயிற்சியை ஆரம்பிப்பவர்களுக்கு எட்டு படிகளில் ‘நாமஜபம்’, ‘சத்சங்கம்’ மற்றும் ‘சத்சேவை’ ஆகியவை அதிகம் வலியுறுத்தப்பட்டன. ஆனால் இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப, ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தை களைவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஸாதகர்கள் ஆன்மீக பயிற்சியை கீழ்க்கண்ட வரிசையில் செய்ய முயற்சிக்க வேண்டும். அதாவது, ‘ஆளுமை குறைகளை களைதல்’, ‘சத்சேவை’, ‘நாமஜபம்’, ‘சத்சங்கம்’, ‘தியாகம்’, ‘ப்ரீதி’, ‘ஆன்மீக உணர்வை விழிப்படைய செய்தல்’ மற்றும் ‘அஹம்பாவத்தை களைதல்’. இவ்வாறு செய்வதால் விரைவான ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.