1. சுய விழிப்புணர்வின் முக்கியத்துவத்திற்கு ஒரு அறிமுகம்

நமது முதலாவது பகுதியில், ஒருவருடைய ஆளுமையை நிர்ணயிப்பது எது என்பது பற்றியும் ஏன் ஆளுமை குறைகள் மனிதப்பண்புகளை விருத்தி செய்யும் ஒருவருடைய ஆற்றலை குறைக்கின்றது என்பது பற்றிய பின்னணி தகவல்களை கண்டோம். நமது துன்பத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்று ஆளுமை குறைகள் ஆகும். ஒருவர் தனது விதிக்கேற்ப துன்பத்தை அனுபவிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்தால் ஆளுமை குறைகளே அதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் ஆன்மீக முன்னேற்றத்தை உண்மையாக நாடுபவர்கள், எந்த ஆன்மீக பாதையை பின்பற்றினாலும் அவர்களின் ஆளுமை குறைகள் அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் சிறந்த மன ஆரோக்கியத்துடனும் திடமாகவும் இருக்கும்போது (அதாவது குறைந்த ஆளுமை குறைகளுடன்) அவரால் வேகமாக ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்து ஆன்மீகத்தின் மூலம் சிறந்த ஆளுமையை கொண்ட ஒரு நபராக ஆக முடியும்.

2.  சுய விழிப்புணர்வு என்றால் என்ன?

சுய முன்னேற்றத்திற்காக, தனிப்பட்ட வளர்ச்சிக்காக அல்லது ஆன்மீக வளர்ச்சி போன்ற உயர்ந்த இலக்கிற்காக தம்மை அர்ப்பணித்திருக்கும் யாரேனும் ஒருவர் தம்மை தாமே புரிந்து கொள்ள தீவிரமாக முயல வேண்டும். ஏனெனில் ஒருவர் தான் எங்கு குறைபாட்டை கொண்டுள்ளேன் என புரிந்துகொள்ளும்போதே அவரால் எங்கு முன்னேற்றமடைய கவனத்தை செலுத்த வேண்டும் என தெரிந்து கொள்ள முடிகிறது.

சுய விழிப்புணர்விற்கான பொருள் விளக்கம்

  1. ஒருவர் கொண்டிருக்கும், சுய விசாரணை செய்யக்கூடிய ஆற்றலே, சுய விழிப்புணர்வு ஆகும்.
  2. இது ஒருவர் தன்னுடைய பலங்கள், பலவீனங்கள், குணங்கள், குறைகள், கருத்துக்கள், எண்ணங்கள், நம்பிக்கைகள், கொள்கைகள், எதிர்செயல்கள், எதிர்விளைவுகள், மனப்பாங்கு, உணர்ச்சிகள் மற்றும் உந்துதல்கள் பற்றிய புரிதலையும் உள்நோக்கினையும் பெறுதல் ஆகும்.
  3. எனவே சுய விசாரணை என்பதில் மற்றவர் எவ்வாறு ஒருவரை மதிப்பிடுகிறார் என்பதும் உள்ளடக்கம்
  4. ஒருவரின் நடத்தை, எதிர்செயல்கள் மற்றும் ஒழுக்கம் மற்றவர் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது.

உளவியல் நிபுணர்கள் சுய விழிப்புணர்வை, பொது அல்லது தனிப்பட்ட என இரு பகுதிகளாக பிரிப்பார்கள்.

  1. பொது சுய விழிப்புணர்வு: இவ்வகை விழிப்புணர்வு தாம் எவ்வாறு மற்றவருக்கு வெளிப்படுகின்றோம் என்று தெரிந்து கொள்ளும்போது ஏற்படுகின்றது. ஒரு மேடைப்பேச்சு வழங்குதல் அல்லது நண்பர் குழாமுடன் பேசுதல் போன்ற மற்றவர் கவனத்தின் மையத்தில் இருக்கும் தருணத்தில், பொது சுய விழிப்புணர்வு ஏற்படுகிறது. இவ்வகை விழிப்புணர்வு பலரையும் சமூக வரையறைகளுக்கு கட்டுப்படுத்திவிடுகிறது. நாம் கண்காணிக்கப்படுகின்றோம் அல்லது மதிப்பிடப்படுகின்றோம் என்று அறியும்போது பெரும்பாலும் நாம் சமூகத்தினால் ஏற்கப்படும் அல்லது விரும்பப்படும் விதத்தில் நடந்து கொள்ளவே முயற்சி செய்வோம். சுருக்கமாக சொல்வதெனில் நமது உண்மையான ஆளுமையை வெளிப்படுத்தாத சிறந்ததொரு நடத்தையை வெளிப்படுத்துவோம். சில சமயங்களில் பொது விழிப்புணர்வு ‘மதிப்பீடு பதட்டத்திற்கு’ ஒருவரை கொண்டு சென்று, மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைப்பார்களோ எனும் மன அழுத்தம், ஏக்கம் அல்லது கவலைக்கு கொண்டு செல்லலாம்.
  2. தனிப்பட்ட சுய விழிப்புணர்வு: தனிப்பட்ட ரீதியில் சிலர் தம்மை பற்றிய சில அம்சங்களை தாமே அறிந்துகொள்வது இவ்வகை ஆகும். உதாரணமாக உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்துக்கொள்வது ஒரு வகை தனிப்பட்ட சுய விழிப்புணர்வு ஆகும். முக்கிய பரீட்சை ஒன்றிற்கு தயார் செய்ய மறந்தபோது பதட்டத்தால் வயிறு கலக்குவதை உணர்வதும், நம்மை கவர்ந்த ஒருவரை காணும் போது இதயம் படபடப்பதை உணர்வதும் தனிப்பட்ட சுய விழிப்புணர்விற்கான சில சிறந்த உதாரணங்கள். நெருங்கிய நண்பர்களுக்கோ குடும்பத்தினருக்கோ நமது சில அந்தரங்கங்கள் தெரிந்திருக்கும், ஏனெனில் அவர்களிடம் நாம் எதையும் மறைப்பதில்லை. ஆகையால், நம்மை மதிப்பீடு செய்வதற்கு அவர்கள் மிக சிறந்த துணையாக இருக்கிறார்கள்.

இவ்வாறு தொடர்ந்து ஆராயும் பொழுது நம்மைப்பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடிவதோடு, மற்றவர்கள் எவ்வாறு எம்மை காண்கிறார்கள் என்பதனையும் புரிந்து கொள்ள முடியும். இதனால் நமது பண்புகளின் வேறுபட்ட வடிவங்களை உன்னிப்பாக அறிய முடியும். ஆகையினால் நமது குறைகளை கடந்து செல்லவும் நமது பலங்கள் பற்றி அறிந்து கொள்ளவும் சிறந்த ஒரு நிலையில் காணப்படுவோம். பின்வரும் பத்திகளில் எவ்வாறு நமது சுய விழிப்புணர்வை அதிகரிக்கலாம் எனும் வழிகளை காண்போம்.

3. தன்னை தானே கண்காணிப்பதன் மூலம் சுய விழிப்புணர்வை எவ்வாறு அதிகரிப்பது

நமது ஆளுமையை புரிந்து கொள்ள நமது மனதின் இயல்பை புரிந்து கொள்ள வேண்டும். நமது மனமானது, நினைவு மனம் மற்றும் ஆழ்மனம் ஆகிய இரு பகுதிகளை கொண்டுள்ளது. நமது ஆழ்மனமானது மிகப்பெரியது. அதனுள் புதைந்து கிடக்கும் எண்ணப்பதிவுகளை வெளிக்கொணர்ந்து ஆராய்வது அவ்வளவு எளிதல்ல. இருப்பினும் நாள் முழுக்க ஒருவரது மனது சில நிகழ்வுகளுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் எதிர்மறையாக கொந்தளிப்பதும் எதிர்விளைவு அளிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் விளைவாக ஒருவர் குறிப்பிட்ட அளவு அமைதியின்மை, பாதுகாப்பின்மை, பயம் அல்லது கோபம் போன்ற உணர்வுகளையும் எதிர்கொள்கின்றனர். மிகவும் கஷ்டப்பட்டு நம்மில் பலர் வாழ்க்கையை நடத்தி செல்லும்போது ஒரு தருணம் நிறுத்தி ஏன் அந்த உணர்வை எதிர்கொண்டோமென ஆய்வு செய்வதில்லை. உண்மையில் தினசரி வாழ்க்கையில் அவ்வாறான சந்தர்ப்பங்கள் மூலம், ஒருவரின் மனம் நிகழ்வுகளுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் எதிர்மறையாக நடந்துகொள்வதால், அந்த தன்மையினை புரிந்து கொள்ள மனமே ஒரு ஜன்னலை திறந்து அதற்கு ஏதுவாக அமைகிறது. ஒருவர் எச்சரிக்கையாகவும் பாரபட்சமற்ற நோக்கினை கொண்டவராக இருந்தால், மனம் திறக்கும் இந்த சந்தர்ப்பத்தின் மூலம், அந்த தன்மையை அறிந்து கொள்ளலாம். இதன் விளைவாக, ஒருவர் தனது மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பல்வேறு தூண்டுதல்களுக்கு மனம் எவ்வாறு எதிர்விளைவை அளிக்கிறது என்பது பற்றியும், அதிக சுய விழிப்புணர்வை பெற்றுக்கொள்ள ஆரம்பிப்பார். இதுவே சுய புரிதல் என கூறப்படுவதாகும். அதாவது தனது எண்ண ஓட்டத்தைப்பற்றி தானே அறிந்து புரிந்து கொள்ளும் செயல்முறையாகும். இவ்வகை சுய விருத்தியானது, ஒருவர் தன்னுடைய உடம்பு மற்றும் எண்ணங்கள், செயல்கள், கருத்துக்கள், உணர்வுகள், மற்றும் மற்றவருடனான தொடர்புகள் போன்ற மனத்தின் இருப்பை பற்றி விழிப்புணர்வுடன் இருப்பதை குறிக்கும். ஆகையால் இதுவே எதிர்மறை உணர்வுகளையும் விளைவுகளையும் கடந்து செல்வதற்குரிய முதற்படி.

ஆழ்மனதில் உள்ள குறைகளின் எண்ணப்பதிவுகள் காரணமாகவே சந்தர்ப்பங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் பொதுவாக ஒருவர் எதிர்மறையாக செயல்படுகிறார்.

உதாரணம் ஒன்றை பார்க்கலாம். சக ஊழியரை முதலாளி பாராட்டி பேசியதால் அனன்யா அமைதியற்ற நிலையை உணர்ந்தார். அதைப்பற்றியே நாள் முழுவதும் சிந்தித்து கொண்டிருந்ததால் அமைதியற்ற நிலை இன்னும் அதிகரித்தது. ‘நான் எவ்வளவு கடினமாக வேலை செய்தாலும் அது கவனிக்கப்படுவதில்லை’ என்ற எதிர்மறை எண்ணங்களில் அவள் மூழ்கினாள். சுருக்கமாக சொன்னால் அன்றைய நாள் அனன்யாவிற்கு சிறப்பாக அமையவில்லை. அன்று இரவு நன்றாக தூங்கி காலையில் எழுந்த பின், அதைப்பற்றி அவள் மறந்து, வழக்கம் போல் தனது வாழ்க்கையை நடத்தினாள். மாறாக, ஏன் இந்த அமைதியற்ற உணர்வு ஏற்பட்டது என்கின்ற விழிப்புணர்வு ஏற்பட்டு, உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்திருந்தால் எந்த ஆளுமை குறையின் நிமித்தம் இவ்வாறான அமைதியற்ற நிலை ஏற்பட்டது என, அவளது மனதினை பற்றிய புரிந்துணர்வை அவள் பெற்றிருப்பாள். அதற்கிணங்க எதிர்காலத்தில் இவ்வாறான சந்தர்ப்பங்களில், அமைதியற்ற நிலையை தவிர்க்கும் பொருட்டு எவ்வாறு தீர்வு சார்ந்த முன்னோக்குடன் இருந்து ஸ்திரமாக இருக்கலாம் என்பதை அவள் தெரிந்து கொண்டிருப்பாள்.

அனன்யா இவ்வகையான சந்தர்ப்பங்களில் அவரது உணர்வுகள் மற்றும் எண்ணப்போக்குகள் பற்றி விழிப்பாக இருந்து வர, மேலும் பல நிலைகளில் அவரால் சுய விழிப்புணர்வை பெற முடியும். உதாரணமாக,

  • விழிப்படையும் வரைக்கும் எவ்வளவு நேரம் அமைதியற்ற நிலை தொடர்ந்தது?
  • அப்பொழுது அவளால் அதற்கு தடுப்பு போட்டு, அமைதியற்ற உணர்வை கட்டுப்படுத்த முடிந்ததா?
  • அவளால் மனதை உள்முகமாக்கி, அவளை பற்றியும் அவளது குறைகளை பற்றியும் கற்றுக்கொள்ள முடிந்ததா?
  • இந்த அமைதியற்ற நிலை வேறெந்த சந்தர்ப்பத்தில் நிகழ்கிறது? வேறு யாரெல்லாம் தொடர்புபட்டுள்ளனர்?

4 .  சுய விழிப்புணர்வை எவ்வாறு அதிகரிப்பது – இன்னொருவர் தனது கருத்தை அல்லது நமது தவறை கூறும்போது

‘ராகுல், இந்த அலறலை குறைக்க போகிறாயா இல்லையா’ என ராகுலின் தந்தை கூச்சலிடுகிறார். ‘நீ தொடர்ந்து இசையை சத்தமாக அலற விடுவதால் இந்த வீட்டில் அமைதியே இல்லை’. ராகுல் மனதிற்குள் தனது தந்தையை திட்டிவிட்டு, ஒலி அளவை குறைக்கிறான்.

மற்றவர் நம்மை பற்றி, நம் செயற்பாடுகள் மற்றும் நம் வாழ்வை பற்றி கூறும் எதிர்மறை கருத்துக்களை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. அவ்வகையான தருணங்களில் ‘ஏன் அவர்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை’, ‘நான் அவ்வாறு அல்லவே’ மற்றும் ‘இதை பற்றி மேலும் கேட்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை’ போன்ற எண்ணங்கள் நமக்கு ஏற்படுகின்றன.

ராகுல் இந்த சூழ்நிலையை பாரபட்சம் இன்றி சிறிது நேரம் நோக்கினால் பிறர் தன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி ஓரிரு விஷயங்கள் தெரிந்து கொண்டிருப்பான். பிறர் நம்மை பற்றி எவ்வளவு கடுமையான கருத்துக்களை கூறினாலும் அது அவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் உணர ஒரு துப்பாக அமைகிறது. நம்முடைய செயல் பிறருக்கு துன்பத்தை அளித்திருந்தால், அது அனேகமாக நம் செயலால் பிறரை மோசமாக பாதிக்கும் நம்முடைய ஆளுமை குறைகளால்தான்.

5.  சுய விழிப்புணர்வை எவ்வாறு அதிகரிப்பது – மற்றவர் செய்த தவறை கவனித்து சுய ஆய்வினை மேற்கொள்ளுதல்

வித்யாவும் விவேக்கும் வீட்டு வேலைகள் பற்றி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். வித்யா விவேக்கிடம் அவன் வீட்டு வேலைகள் செய்வது குறைவு என வலியுறுத்தினாள். விவேக்கோ தான் வீட்டு வேலைகளை நேரத்திற்கு செய்ய முடியாததற்கு நொண்டிச்சாக்குகள் கூறினான். விவேக்கின் நண்பனான மணிவண்ணனுக்கு இந்த வாக்குவாதம் காதில் விழ, தானும் விவேக் போன்று தவறு இழைத்துள்ளோம் என உணர்ந்தான். இப்போது ஒரு மூன்றாம் நபராக இருந்து பார்த்தபோதும், உணர்வு பூர்வமாக சம்பந்தப்படாத போதும், மணிவண்ணனால் இந்த சந்தர்ப்பத்தை பாரபட்சமின்றி நோக்க முடிகிறது. இதனால் விவேக்கின் நொண்டிச்சாக்குகள் சிறுபிள்ளைத்தனமாகவும் பொருத்தமற்றதாகவும் இருக்கிறது எனவும் இதுவே அவனது மனைவியை ஆத்திரமூட்டுகிறது என்பதையும் மணிவண்ணன் உணர்ந்தான். இந்த விளைவுகளை கண்டு மணிவண்ணன் தனது சோம்பேறித்தனத்தை விடுத்து தனது மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவ வேண்டும் என முடிவு செய்தான்.

இன்னொருவருடன் சம்பந்தப்பட்ட தவறுகளை நோக்கும் பொழுது, எவ்வாறு ஒருவர் தன்னைப்பற்றிய புரிதலை பெற்றுக்கொள்கிறார் என்பதற்கு இதுவே உதாரணமாகும். ஒருவர் நேரடியாக சம்பந்தப்படாதிருக்கும்போது, உணர்ச்சிவசப்படும் நிலையில் இல்லாததால், அவரால் புறத்தே நின்று மூன்றாமவராக நோக்கும் போது, இன்னும் அதிகமாக அந்த சூழ்நிலையிலிருந்து கற்க முடிகிறது.

6. நமது கனவுகளும் கூட நம்மை பற்றி நமக்கு கூறுகின்றன

சில சமயங்களில், நமது ஆழ்மனதில் வலுவாக பதிந்திருக்கும் எண்ணங்கள், நமது கனவுகளில் வெளிப்படுவதோடு, நம்மால் அவற்றை ஞாபகம் வைத்திருக்கவும் முடிகிறது. இதன் மூலம் கூட நமது மனதை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு ஸாதகர், மேடைக்கு சென்று விரிவுரை ஒன்று கொடுக்கும் முன்பாக பயத்தினை உணர்வதை போன்று கனவு கண்டிருக்கிறார். இதனால் வியர்த்து போய் தூக்கம் கலைந்து, அடுத்த ஒரு மணிநேரம் தூங்க முடியாமல் தவித்திருக்கிறார். இவ்வகையான கனவுகள் பற்றி ஆராய்வது பயனளிக்கும். ஏனெனில் இவை நமது ஆழ்மனதில் காணப்படும் சில பிரச்சனைகளை பற்றிய புரிந்துணர்வை நமக்கு அளிக்கிறது.

7.  முடிவுரை

  • குறைகளை களைவதின் முதற்படி சுய விழிப்புணர்வை கொண்டிருப்பதாகும்.
  • ஒருவர் தன்னுடைய தவறின் மூலமோ, மற்றவரிடம் தன்னை பற்றிய கருத்துக்களை கேட்பதன் மூலமோ, மற்றவரின் தவறை மூன்றாமவராக நோக்குவதன் மூலமோ, அல்லது சில கனவுகளின் மூலமோ சுய விழிப்புணர்வை பெற்றுக்கொள்ளலாம்.
  • ஒருவர் நிலையற்ற உணர்ச்சிகளை எதிர்நோக்கும் போதும், அமைதியற்று இருக்கும் போதும் அல்லது வருத்தப்படும் போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில், ஆழ்ந்து ஆராயும் பொழுது, இவ்வகையான சூழ்நிலைகள், தூண்டப்பட்ட ஒருவரின் குறைகள் பற்றிய உட்பார்வையை தருகிறது.
  • நாம் எப்பொழுதும் நம்மை பற்றி கற்றுக்கொள்வதற்கு திறந்த மனத்துடன் தயாராக இருக்க வேண்டும். மற்றவரிடம் இருந்து நம்மை பற்றிய கருத்துக்களை கேட்பதற்கு உறுதியான மனத்துடன் இருக்க வேண்டும். இதன் மூலம் நமது தவறுகளை மூன்றாமவர் போல் நோக்கி, ஆராய்ந்து நல்ல மாற்றத்திற்குரிய நடைமுறை தீர்வுகளை தேடிக்கொள்ள முடியும்.